'போர் அல்ல - பழிவாங்கல் நடவடிக்கை': ஐ.எஸ்., அமைப்புக்கு டிரம்ப் எச்சரிக்கை
'போர் அல்ல - பழிவாங்கல் நடவடிக்கை': ஐ.எஸ்., அமைப்புக்கு டிரம்ப் எச்சரிக்கை
UPDATED : டிச 21, 2025 02:26 PM
ADDED : டிச 21, 2025 04:29 AM

நியூயார்க்: அமெரிக்க ராணுவம் சிரியாவில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளை குறிவைத்து மிகப்பெரிய அளவிலான வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
தாக்குதல்
மேற்காசிய நாடான சிரியாவின் பால்மிரா அருகே கடந்த 13ம் தேதி ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உட்பட மூன்று அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பொறுப்பானவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்திருந்தார். அதன்படி, சிரியாவில், 'ஆப்பரேஷன் ஹாவ்க்கி' என்ற பெயரில் அமெரிக்கா தாக்குதலை துவங்கி உள்ளது.
போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டு, மத்திய சிரியாவில் 70க்கும் மேற்பட்ட ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் இலக்குகள் நேற்று தாக்கப் பட்டன. இதில், 100க்கும் மேற்பட்ட துல்லியமான ஆயுதங்கள் பயன் படுத்தப்பட்டன. இது குறித்து அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்ஸெத் கூறுகையில், ''இது போரின் துவக்கம் அல்ல - இது பழிவாங்கலின் அறிவிப்பு. ''அதிபர் டிரம்ப் தலைமையின் கீழ், அமெரிக்கா, தன் மக்களை பாதுகாக்க ஒருபோதும் தயங்காது, ஒருபோதும் பின்வாங்காது,'' என்றார். பயங்கரவாதிகளின் மீதான தாக்குதலை, அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டி உள்ளார்.
ஒத்துழைப்பு
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது: அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, சிரியாவில் உள்ள ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கோட்டைகள் மீது நாங்கள் மிகத் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறோம். ஐ.எஸ்., பயங்கரவாதிகள் முற்றிலும் அழிக்கப்பட்டால், அந்த நாட்டிற்கு ஒரு சிறந்த எதிர்காலம் உண்டு. சிரிய அரசும் இந்த நடவடிக்கையை ஆதரித்து, ஐ.எஸ்., பயங்கரவாதத்தை ஒழிப்பதில் ஒத்துழைப்பு தொடரும் என்று தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

