தூத்துக்குடியில் விவசாயியிடம் ரூ.2,500 லஞ்சம் வாங்கிய விஏஓ சிக்கினார்
தூத்துக்குடியில் விவசாயியிடம் ரூ.2,500 லஞ்சம் வாங்கிய விஏஓ சிக்கினார்
ADDED : செப் 09, 2026 08:20 PM

துாத்துக்குடி: விவசாயியிடம், 2,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., தனசேகர், 45, கைது செய்யப்பட்டார்.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார், தேரிக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் மதிபால், 56. இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம், காயாமொழி கிராமத்தில் உள்ளது. அதில், 86 சென்ட் நிலத்தில், தென்னை மற்றும் எலுமிச்சை விவசாயம் செய்து வருகிறார். அரசு மானியம் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க முடிவு செய்த மதிபால், அதற்காக சிறு, குறு விவசாய சான்றிதழ் மற்றும் நில அடங்கல் பெற, காயாமொழி கிராம நிர்வாக அலுவலர் தனசேகரை அணுகினார்.
அடங்கல் பெறுவதற்கு மதிபாலிடம், தனசேகர், 2,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். மதிபால், துாத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். போலீசார் அறிவுரைப்படி, மதிபால், பணத்தை, தனசேகரிடம் கொடுத்தார். மறைந்திருந்த போலீசார், தனசேகரை, கைது செய்தனர்.
