பீஹாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கியது; 1,314 வேட்பாளர்கள் போட்டி
பீஹாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கியது; 1,314 வேட்பாளர்கள் போட்டி
ADDED : நவ 06, 2025 07:35 AM

பாட்னா: பீஹாரில், 121 சட்டசபை தொகுதிகளில் இன்று (நவ.,06) காலை 7 மணிக்கு முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கியது. 121 தொகுதிகளில் பல்வேறு கட்சிகளை சார்ந்த 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பீஹாரில் மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு, இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில், ஆளும் பா.ஜ., எதிர்க்கட்சியான காங்., கூட்டணிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, புது போட்டியாளராக தேர்தல் களத்தில் குதித்துள்ளது.
இந்த தேர்தலில், ஆளும் தே.ஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமார் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மஹாகட்பந்தன் கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பீஹாரின் 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில், முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று (நவ.,06) காலை 7 மணிக்கு தொடங்கியது.
7.24 கோடி வாக்காளர்கள்
ஓட்டுப்பதிவு, மாலை 6:00 மணி வரை நடக்கிறது. இதற்காக மொத்தம், 45,341 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில், 36,733 ஓட்டுச்சாவடிகள் கிராமப்புறங்களில் உள்ளன. பதற்றமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மொத்தமுள்ள 7.24 கோடி வாக்காளர்களில், 3.75 கோடி வாக்காளர்கள் முதற்கட்ட தேர்தலில் ஓட்டளிக்க உள்ளனர். இதில், 10.72 லட்சம் பேர் முதன்முறை வாக்காளர்கள்.
முக்கிய வேட்பாளர்கள் யார்?
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், மஹாகட்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் - ரகோபூர்; பா.ஜ.,வைச் சேர்ந்த துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி - தாராபூர்; ஜனசக்தி ஜனதா தள தலைவரும், தேஜஸ்வியின் சகோதரருமான தேஜ் பிரதாப் - மஹுவா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.
1,314 வேட்பாளர்கள் போட்டி
121 தொகுதிகளில், 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தலைநகர் பாட்னாவில் உள்ள திகா சட்டசபை தொகுதியில் அதிகபட்சமாக 4.58 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஷேகுபுரா மாவட்டத்தின் பர்பிகா தொகுதியில் குறைந்தபட்சமாக 2.32 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
அதிகபட்சமாக குர்ஹானி, முசாபர்பூர் ஆகிய தொகுதிகளில் தலா, 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதை தொடர்ந்து, மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு, 11ம் தேதி இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. இரு கட்டங்களில் பதிவாகும் ஓட்டுகள், 14ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

