'ஆன்லைன்' ரயில் முன்பதிவு டிக்கெட்டை வேறு தேதிக்கு மாற்றிக்கொள்ளலாம்
'ஆன்லைன்' ரயில் முன்பதிவு டிக்கெட்டை வேறு தேதிக்கு மாற்றிக்கொள்ளலாம்
ADDED : அக் 08, 2025 04:02 AM

புதுடில்லி : அடுத்த ஆண்டு ஜனவரி முதல், 'ஆன்லைன்' மூலம் முன்பதிவு செய்து உறுதியான ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்யாமல் வேறு தேதிகளுக்கு மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகமாக உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
'ஆன்லைன்' மூலம் செய்யப்படும் ரயில் டிக்கெட் முன்பதிவில் தற்போது, பயணத் தேதியை மாற்ற விரும்பும் பயணியர், டிக்கெட்டை ரத்து செய்து புதிதாக மீண்டும் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
ரத்து செய்யும் போது அதற்கான கட்டணம் பிடிக்கப்பட்டு, பயணியருக்கு கூடுதல் செலவும் சிரமமும் ஏற்படுகிறது.
இந்த முறையில் மாற்றம் கொண்டு வர ரயில்வே அமைச்சகம் ஆலோசித்து வந்த நிலையில், அதற்கான புதிய திட்டத்தை வரும் ஜனவரியில் அறிமுகப்படுத்த உள்ளது.
அதன்படி, உறுதி செய்யப்பட்ட ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் வைத்திருக்கும் பயணியர், பயண தேதியில் மாற்றம் ஏற்பட்டால் டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு தேதிக்கு மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகமாக உள்ளது.
இந்த தகவலை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று உறுதி செய்தார்.
'வேறு தேதியில் டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே மாற்றம் செய்ய முடியும். மாற்றப்படும் தேதிக்கான ரயில் கட்டணம் அதிகம் எனில், அதற்கான வித்தியாச தொகையை மட்டும் செலுத்த வேண்டும். வேறு கூடுதல் கட்டணங்கள் கிடையாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.