UPDATED : செப் 04, 2024 04:54 AM
ADDED : செப் 04, 2024 02:09 AM

சென்னை: தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், 2023 - 24 சீசனில், 25.51 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இது, அதற்கு முந்தைய சீசனுடன் ஒப்பிடும் போது, 4.33 லட்சம் டன் குறைவு.
மத்திய அரசின் சார்பில், தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கிறது.
இதற்காக, நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன. நெல் வழங்கும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுகிறது.
கடந்த 2023 செப்டம்பர், 1ல் துவங்கிய கொள்முதல் சீசன், இந்தாண்டு ஆகஸ்ட், 31ல் முடிவடைந்தது. இந்த சீசனில், 3,209 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக, 34.96 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதுவே, அதற்கு முந்தைய, 2022 - 23 சீசனில், 44.22 லட்சம் டன்னாக அதிகரித்திருந்தது. எனவே, கடந்த சீசனில், 9.26 லட்சம் டன் நெல் கொள்முதல் குறைந்துள்ளது.
இதே காலத்தில் தஞ்சை, திருவாரூர் உட்பட, 10 டெல்டா மாவட்டங்களில் மட்டும் நெல் கொள்முதல், 29.84 லட்சம் டன்னில் இருந்து, 25.51 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
போதிய மழை இல்லாததுடன், வெளிச்சந்தையில் நெல்லுக்கு அதிக விலை வழங்கியது ஆகியவற்றால், நெல் கொள்முதல் குறைந்தது.
இருப்பினும், இந்திய உணவு கழகத்திடம் இருந்து கூடுதலாக அரிசி வாங்கியதால், ரேஷனில் தட்டுப்பாடு இல்லாமல் வினியோகம் செய்யப்படுகிறது. நெல் சாகுபடி முன்கூட்டியே துவங்கியுள்ளதால், நடப்பு சீசனில் நெல் கொள்முதல் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
டெல்டாவில் கிடைத்தது எவ்வளவு - டன்
----------------------------------------
மாவட்டம் - 2023/ 24 - 2022/ 23
-------------------------------
கரூர் - 4,616 - 11,756
புதுக்கோட்டை - 92,236 - 1.27 லட்சம்
திருவாரூர் - 7.45 லட்சம் - 8.36 லட்சம்
திருச்சி - 77,426 - 1.13 லட்சம்
தஞ்சை - 7.89 லட்சம் - 9.73 லட்சம்
கடலுார் - 2.71 லட்சம் - 2.44 லட்சம்
பெரம்பலுார் - 18,832 - 18,471
அரியலுார் - 70,439 - 80,705
நாகை - 2.47 லட்சம் - 2.78 லட்சம்
மயிலாடுதுறை - 2.33 லட்சம் - 3 லட்சம்