சுகாதார சேவைகளை மேம்படுத்த புதிய திட்டங்கள் அறிமுகம்
சுகாதார சேவைகளை மேம்படுத்த புதிய திட்டங்கள் அறிமுகம்
ADDED : ஜூலை 01, 2024 12:28 AM

புதுடில்லி: நாட்டு மக்களுக்கான சுகாதார சேவைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன், மூன்று புதிய திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
சுகாதார சேவைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில், பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மேலும் மூன்று முன்னோடி திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
'ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்' எனப்படும் அடிப்படை சுகாதார சேவைகள் வழங்கும் மையங்கள் நாடு முழுதும் செயல்பட்டு வருகின்றன. இதற்கான என்.க்யூ.ஏ.எஸ்., எனப்படும் தேசிய தர உறுதி நடைமுறை சான்றிதழ் அளிக்கும் சேவையை, ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளும் திட்டம் அறிமுகமாகி உள்ளது.
அடுத்ததாக, பொது சுகாதார சேவை தரத்தின் அடிப்படையில் சுகாதாரத் துறையில் ஈடுபட்டுள்ள அமைப்புகள், விதிகள், சட்டங்கள், புதிய மாற்றங்களை தெரிந்து கொள்வதற்காக, மத்திய சுகாதாரத் துறை இணையதளத்தில், புதிய 'டேஷ்போர்டு' எனப்படும் தகவல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, உணவு தயாரிப்பு மற்றும் வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், உடனடி உணவு சான்றிதழ் பெறவும், பதிவு செய்வதற்குமான முயற்சியும் துவக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அனுபிரியா படேல் கூறியுள்ளதாவது:
தேசிய தர உறுதி நடைமுறை மதிப்பீடுகள் மற்றும் தகவல் பலகை ஆகியவை, பொது சுகாதார சேவையில் தரத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டவை. உடனடி உணவு லைசென்ஸ் வழங்குவது, தொழில் செய்வதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்குகிறது.
இந்த தேசிய தர உறுதி நடைமுறை மதிப்பீடுகள், ஒருங்கிணைந்த பொது சுகாதார பரிசோதனை மையங்களில், பரிசோதனை நடைமுறையின் தரத்தை உயர்த்தும். இதன் வாயிலாக, அந்த பரிசோதனைகளின் நம்பகத்தன்மை அதிகரிக்கும்.
உடனடி உணவு சான்றிதழ் மற்றும் பதிவு செய்யும் வசதி, இந்த துறையில் புதிய முயற்சியாகும். உணவு பாதுகாப்பு மற்றும் உறுதிப்படுத்தும் முறையின் வாயிலாக இது வழங்கப்படும். நாடு முழுதும் உள்ளவர்கள், இதற்கான இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
வரும், 2047ல் அனைவருக்கும் தரமான சுகாதார கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் உன்னதமான நோக்கத்துக்கு, இந்த முயற்சிகள் வலு சேர்ப்பதாக உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.