மதுரையில் 10 தொகுதிகளின் வெற்றி நிலவரம்; சபரீசன் ஆலோசனையில் திருமங்கலம் 'டார்க்கெட்'
மதுரையில் 10 தொகுதிகளின் வெற்றி நிலவரம்; சபரீசன் ஆலோசனையில் திருமங்கலம் 'டார்க்கெட்'
UPDATED : பிப் 13, 2026 10:04 AM
ADDED : பிப் 13, 2026 06:19 AM

மதுரை: மதுரை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளில் தி.மு.க., வெற்றி நிலவரம் குறித்து மாவட்ட, பகுதி, ஒன்றிய செயலாளர்களிடம் முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆலோசனை நடத்தினார். இதில் அ.தி.மு.க.,வை சேர்ந்த எதிர்கட்சி துணைதலைவர் உதயகுமாரின் திருமங்கலம் தொகுதியை தி.மு.க., வரும் தேர்தலில் கைப்பற்ற வேண்டும் என 'டார்க்கெட்' விதித்துள்ளார்.
மதுரை நகர் தி.மு.க., வுக்கு உட்பட்ட வடக்கு, மத்தி, தெற்கு தொகுதிகளுக்கான கூட்டம் அமைச்சர் தியாகராஜன் பங்களா, வடக்கு மாவட்ட தி.மு.க.,வுக்கு உட்பட்ட மதுரை கிழக்கு, மேற்கு, மேலுார், சோழவந்தான் தொகுதிகளுக்கு ஜி.ஆர்.டி., ஓட்டல், தெற்கு மாவட்ட தி.மு.க.,வுக்கு உட்பட்ட திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி தொகுதிகளுக்கு திருமங்கலம் டோல்கேட் அருகில் உள்ள ஓட்டலிலும் ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தன. அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், மாவட்ட செயலாளர்கள் தளபதி எம்.எல்.ஏ., மணிமாறன், பகுதி, ஒன்றியச் செயலாளர்கள் மட்டும் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் 200 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் சட்டசபை தேர்தலில் களம் இறங்க உள்ளது. நகரில் தெற்கு தொகுதி 'வீக்' ஆக உள்ளது. அத்தொகுதியில் அதிகம் உள்ள சவுராஷ்டிர மக்களின் கோரிக்கையான என்.எம்.ஆர்., சுப்பராமனுக்கு சிலை வைக்க வேண்டும் என்பதை நிறைவேற்ற கூறினோம்.
லோக்சபா தேர்தலில் பா.ஜ., அதிக ஒட்டுக்களை பெற்றுள்ளதே என சபரீசன் கேள்வி எழுப்பினார். அதற்கு, லோக்சபா தேர்தலில் மோடிக்காக ஓட்டு அளித்திருப்பர். சட்டசபை தேர்தலில் அவ்வாறு இருக்காது. குறிப்பாக இத்தொகுதியில் தி.மு.க., சின்னத்தில் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என நிர்வாகி ஒருவர் கூறினார்.
வடக்கு தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் டாக்டர் சரவணன் போட்டியிட உள்ளார். அவர் இப்போதே தொகுதி மக்களுக்காக 3 இட்லி ரூ.10க்கு கொடுத்து கவர் செய்கிறார். அவர் சார்ந்த சமுதாய ஓட்டும் அவருக்கு சென்றால் தி.மு.க., தோல்வியுறுமே என்றார் சபரீசன். அரசு ஊழியர்கள் ஓட்டு அதிகம் உள்ளது. அவர் பல்வேறு கட்சிக்கு சென்று வந்ததால் அவரை மக்கள் நம்ப மாட்டார்கள் என கூறி நாங்கள் சமாளித்தோம்.
திருமங்கலம் 'டார்க்கெட்'
மதுரை என்றாலே தி.மு.க.,வில் அமைச்சர், மாவட்ட செயலாளர் கோஷ்டியாக நிர்வாகிகள் பிரிந்து கிடப்பதாகவும், மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் மீது ஏராளமான குற்றச்சாட்டும் உள்ளது. அனைவரும் 'தி.மு.க., கோஷ்டி' என தேர்தல் பணியாற்ற வேண்டும்.
குறிப்பாக முன்னாள் அமைச்சர் உதயகுமாரின் திருமங்கலம் தொகுதியை தி.மு.க., வரும் தேர்தலில் கைப்பற்ற வேண்டும். வெற்றி பெற தேவையான பணிகளை கட்சி தலைமை மேற்கொள்ளும். மேலுார், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம் தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தி 10ஐயும் வெல்ல வேண்டும் என்றார். இவ்வாறு தி.மு.க., வினர் தெரிவித்தனர்.

