வறண்டு வரும் 10,000 பாசன ஏரிகள்: விவசாயம், குடிநீருக்கு சிக்கல் அதிகரிப்பு
வறண்டு வரும் 10,000 பாசன ஏரிகள்: விவசாயம், குடிநீருக்கு சிக்கல் அதிகரிப்பு
ADDED : ஜூலை 13, 2026 07:02 AM

சென்னை: நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள, 10,000 பாசன ஏரிகள் வறண்டு வருவதால், விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் அதிகரித்து வருகிறது.
தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு, 224 டி.எம்.சி., ஆகும். தென்மேற்கு பருவமழை ஏமாற்றி வருவதால், பல அணைகளில் நீர் இருப்பு குறைந்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, 90 அணைகளிலும் சேர்த்து, 74.2 டி.எம்.சி., நீர் மட்டுமே எஞ்சியுள்ளது. அணைகளின் துார்வாரும் பணிகளை மேற்கொள்ளாததால், அவற்றின் கொள்ளளவு 30 சதவீத அளவிற்கு பாதித்துள்ளது.
எனவே, நீர்வளத்துறை கணக்கை விட குறைந்த அளவு டி.எம்.சி., நீர் மட்டுமே அணைகளில் இருக்க வாய்ப்புள்ளது. இதில், 55 அணைகள் வறட்சியான கட்டத்தை எட்டியுள்ளதால், அவற்றில் இருந்து நீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
நீர்வளத்துறை பராமரிப்பில், 14,141 பாசன ஏரிகள் உள்ளன. இவற்றின் வாயிலாக சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்காக நீர் எடுக்கப்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாகத் துறை வாயிலாக, இவற்றில் ஆழ்துளை குழாய்கள் அமைக்கப்பட்டு, கூட்டு குடிநீர் திட்டங்களும் செயலாக்கத்தில் உள்ளன.
மொத்தமுள்ள ஏரிகளில் தற்போது, 2,945 பாசன ஏரிகள் முழுமையாக வறண்டு விட்டன. அதிகபட்சமாக, மதுரையில் 823 ஏரிகளும், சிவகங்கையில், 477, தஞ்சாவூரில், 280, திருவண்ணாமலையில், 240, திருநெல்வேலியில், 143, திண்டுக்கல்லில், 141 ஏரிகள் முழுமையாக வறண்டு கிடக்கின்றன.
மேலும், 6,389 ஏரிகள் வறண்டு விடும் கட்டத்தை நெருங்கி வருகின்றன. இதனால், சாகுபடிக்கான பாசனம், குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. ஏரிகளை நம்பி சாகுபடியை துவங்கியுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
