ADDED : பிப் 27, 2026 06:01 AM

மதுரவாயல்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில், மதுரவாயல் சட்டசபை தொகுதியில் ஒரே நபரின் பெயர் எட்டு முறை இடம்பெற்றிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கடந்த 23ம் தேதி எஸ்.ஐ.ஆர்., பணி நிறைவு செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், மதுரவாயல் தொகுதி 150வது வார்டு, காரம்பாக்கம், பாகம் எண்: 80-ல் ஒரே நபரின் பெயர் எட்டு முறை தனித்தனி வாக்காளர் அடையாள அட்டை எண்களுடன், பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சிறப்பு திருத்தப் பணி முடிந்த பின் வெளியிடப்பட்ட இறுதி பட்டியலிலேயே, இத்தகைய குளறுபடி ஏற்பட்டிருப்பது அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வர் மக்கர்?
இது குறித்து மதுரவாயல் வட்டாட்சியர் கூறுகையில், 'வாக்காளர் தகவல்களை பதிவு செய்யும்போது ஏற்பட்ட, 'சர்வர்' கோளாறு காரணமாக, ஒரே நபரின் பெயர் பலமுறை பதிவாகியிருக்க வாய்ப்பு உள்ளது.
சம்பந்தப்பட்ட பாகத்தின் ஓட்டுச்சாவடி நிலை அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட முறை இடம் பெற்றுள்ள ஒரே நபரின் பெயர் நீக்கப்படும்' என்றார்.

