அன்று இதயத்தில் இடம்... இன்று நாற்காலியில்... தி.மு.க., நேர்காணலில் முதல்வர் ஸ்டாலின் ‛ பஞ்ச்'
அன்று இதயத்தில் இடம்... இன்று நாற்காலியில்... தி.மு.க., நேர்காணலில் முதல்வர் ஸ்டாலின் ‛ பஞ்ச்'
ADDED : மார் 20, 2026 05:27 AM

மதுரை: 'தி.மு.க., நடத்திய நேர்காணலில் பங்கேற்றவர்களிடம் அறிவாலயத்தில் எல்லோருக்கும் சீட் (உட்கார சேர்) கொடுத்தாச்சு. தொகுதிக்கு நான் கொடுக்கும் 'சீட்'டை ஒற்றுமையா ஏற்று வெற்றி பெற செய்ய வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
தி.மு.க.,வில் விருப்ப மனு அளித்த நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் நேர்காணல் நடந்தது. மதுரையில் உள்ள 10 தொகுதிகளை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து அழைக்கப்பட்டனர்.
மதுரை கிழக்கு தொகுதியில் அமைச்சர் மூர்த்தியை தவிர யாரும் மனு அளிக்காததால் அவர் மட்டும் தனியாக பங்கேற்றார். மத்திய தொகுதியில் அமைச்சர் தியாகராஜனுடன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராம் உட்பட 10க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மதுரை மேற்கு தொகுதியில் தலைமை செயற்குழு உறுப்பினர் பாலாஜி, இளைஞரணி மாநில துணை செயலாளர் ராஜா உட்பட 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வடக்கு தொகுதியில் நகர் செயலாளர் தளபதி, அவரது மகன் துரைகோபால்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ., வேலுச்சாமி, பொன்சேது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொகுதி வாரியாக வந்தவர்களை சேரில் அமர வைத்து முதல்வர் தலைமையிலான குழு நேர்காணல் நடத்தியது.
அப்போது முதல்வர் பேசியதாவது: நீங்க எல்லோரும் 'சீட்' கேட்டிருந்தீங்க. அனைவருக்கும் 'சீட்' (உட்கார சேர்) கொடுத்தாச்சு. அறிவாலயத்தில் உங்களுக்கு எல்லாம் செய்துகொடுக்க முடியும். ஆனால் தேர்தலில் தொகுதிக்கு ஒருவருக்கு தான் 'சீட்' கொடுக்க முடியும். அந்த சீட் (வேட்பாளர்) நான் முடிவு செய்துகொள்கிறேன்.
ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடுவது ஸ்டாலின் தான் என நினைத்து ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். உங்கள் முன்னேற்றத்தை கட்சி பார்த்துக்கொள்ளும் என்றார்.
மதுரை தெற்கு தொகுதி கூட்டணிக்கு தொகுதி ஒதுக்கப்படும். இணைந்து பணியாற்றுங்கள் எனக் கூறி கட்சியினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
நிர்வாகிகள் கூறுகையில், கருணாநிதி இருந்தபோது ஒருத்தருக்கு சீட் (வேட்பாளர்) கொடுத்துவிட்டு மற்றவர்கள் எல்லோருக்கும் 'என் இதயத்தில் இடம் இருக்கு' என 'பஞ்ச் டயலாக்' பேசி அனுப்பி வைப்பார்.
தற்போது ஸ்டாலின், 'சீட் கேட்டு வந்த எல்லோருக்கும் அறிவாலயத்தில் சீட் (உட்கார சேர்) கொடுத்தாச்சு' என புதிய 'பஞ்ச் டயலாக்' பேசி அனுப்பி வைத்தார் என்றனர்.

