அமைச்சர் பதவி கேட்கக்கூடாது; துரைமுருகனுக்கு கண்டிஷன்
அமைச்சர் பதவி கேட்கக்கூடாது; துரைமுருகனுக்கு கண்டிஷன்
ADDED : மார் 20, 2026 05:17 AM

சென்னை: 'அமைச்சர் பதவி வேண்டாம் என ஒப்புக்கொண்டால் மட்டுமே, இம்முறை 'சீட்' வழங்கப்படும்' என, அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
10 முறை போட்டி
தி.மு.க., பொதுச்செயலராகவும், நீர்வளத்துறை அமைச்சராகவும் உள்ளவர் துரைமுருகன். இவர், ராணிப்பேட்டை மற்றும் காட்பாடி சட்டசபை தொகுதிகளில், 10 முறை போட்டியிட்டு எட்டு முறை வெற்றி பெற்று உள்ளார்.
காட்பாடி தொகுதியில் துரைமுருகன் கடந்த 1996 முதல், தொடர்ச்சியாக ஆறு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்து வருகிறார்; கருணாநிதி ஆட்சியில், பல்வேறு துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். சட்டசபையில் காரசாரமாக எழும் விவாதங்களை கூட கலகலப்பாக மாற்றி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை சாந்தப்படுத்தும் திறன் பெற்றவர்.
சமீபகாலமாக உடல்நலக் குறைவால் துரைமுருகன் அவதிப்பட்டு வருகிறார். இதை காரணம் காட்டி, அவருக்கு சீட் வழங்குவதை தவிர்க்க, தி.மு.க., தலைமை திட்டமிட்டு உள்ளது. ஆனால், துரைமுருகன் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், ரகுபதி, ராமச்சந்திரன், கயல்விழி ஆகியோர் வரிசையில் துரைமுருகனுக்கும் சீட் வழங்க, தி.மு.க., தலைமை விரும்பவில்லை. இந்த தகவல், கவிஞர் ஒருவர் வாயிலாக துரைமுருகனுக்கு தெரிய வந்தது. இதனால் கோபமான துரைமுருகன், தன் சமுதாய ஓட்டுகள் தி.மு.க.,விற்கு கிடைக்காது என எச்சரிக்கை செய்துள்ளார்.
இதையடுத்து, துரைமுருகனை துணை முதல்வர் உதயநிதி சந்தித்து பேசினார். கடைசியாக ஒரு வாய்ப்பு தாருங்களேன் என, உதயநிதியிடம் துரைமுருகன் கேட்டுள்ளார். தேர்தல் களத்துக்கு துரைமுருகன் செல்ல வேண்டாம் என கட்சி தலைமை முடிவெடுத்ததற்கு காரணம், அவருடைய உடல்நிலை தான்.
முதுகெலும்பு முறிவு
இதனால், முதுகெலும்பு முறிவுக்கு சிகிச்சை எடுத்த கையோடு, தன் உடலை வருத்தி, தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் துரைமுருகன் ஆர்வமாக பங்கேற்றார்; அடுத்தடுத்து நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இதையடுத்து, தன் நிலையை மாற்றிக்கொண்ட தி.மு.க., தலைமை, அவருக்கு சீட் கொடுக்க முன்வந்திருக்கிறது.
ஆனால், கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அமைச்சர் பதவி கிடையாது என்ற தகவலை துரைமுருகனுக்கு சொல்லி அனுப்பி உள்ளனர். ஆனால், அவர் தரப்பில் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

