அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமையுங்கள்: விஜய்க்கு த.வெ.க., நிர்வாகிகள் நெருக்கடி
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமையுங்கள்: விஜய்க்கு த.வெ.க., நிர்வாகிகள் நெருக்கடி
UPDATED : மார் 20, 2026 03:14 PM
ADDED : மார் 20, 2026 05:01 AM

- நமது நிருபர் -
'அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம்' என, த.வெ.க., தலைவர் விஜய்க்கு, அக்கட்சி நிர்வாகிகள் நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: த.வெ.க., துவங்கியபோது இருந்த மவுசு தற்போது இல்லை. விஜயின் குடும்ப பிரச்னை, அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதோடு, தி.மு.க., - அ.தி.மு.க.,வின் பண பலத்துக்கு த.வெ.க.,வால் ஈடுகொடுக்க முடியவில்லை.
தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகளை பிரிக்கும் சக்தியாகவே விஜய் உள்ளார். அதனால்தான், விஜய் யாருடனும் கூட்டணி சேர்ந்து விடக்கூடாது என, தி.மு.க., கடுமையாக வேலை செய்கிறது.
அதேபோல், 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்க, த.வெ.க.,வில் தகுதியான வேட்பாளர்கள் இல்லை என்பதே கள எதார்த்தம். பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தால், தனது செல்வாக்கு சரிந்து விடும்; சிறுபான்மையினர் ஓட்டும் வராது என, விஜய் நினைக்கிறார்.
ஆனால், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, த.வெ.க.,வுக்கு ஓர் வாய்ப்பு உள்ளது. 2024 லோக்சபா தேர்தலின்போதே, கூட்டணிக்காக த.வெ.க.,வுடன் அ.தி.மு.க., பேச்சு நடத்தியது. ஆனால், தேர்தல் முடிந்ததும், அவசர அவசரமாக பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து விட்டார் பழனிசாமி.
களத்தில் இருக்கும் சூழல் குறித்து, பொதுச்செயலர் ஆனந்த் வாயிலாக விஜய்க்கு தெரிவித்தோம். அப்போது, 'அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என்பதில் விஜய்க்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. 'தொகுதி பங்கீடு, கூட்டணிக்கு தலைமை யார் என்பதில், இருவரும் கறாராக இருப்பதால்தான், கூட்டணி கைகூடாமல் உள்ளது' என, ஆனந்த் கூறுகிறார்.
இருவரில் ஒருவர் இறங்கி வந்தால், அ.தி.மு.க., - த.வெ.க., கூட்டணி நிச்சயம் அமைந்து விடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

