தி.மு.க.,வுடன் கூட்டணியா? மனம் திறந்த காங்., தலைமை
தி.மு.க.,வுடன் கூட்டணியா? மனம் திறந்த காங்., தலைமை
ADDED : ஜன 18, 2026 04:33 AM

தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகித்தாலும், கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் என பெரும்பாலானோர், அக்கூட்டணியில் இருந்து விலகி, வரும் சட்டசபை தேர்தலுக்காக, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என வலியுறுத்துவதால், கட்சி நிர்வாகிகள் கருத்தை அறிய, காங்கிரஸ் தலைமை முடிவெடுத்தது.
அதற்காக, தமிழக காங்., நிர்வாகிகளை டில்லிக்கு வரவழைத்து, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மற்றும் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் கருத்து கேட்டுள்ளனர்.
தமிழக காங்., எம்.பி.,க்கள், இந்நாள், முன்னாள் தலைவர்கள் என பலரிடமும் பேசி, அவர்களுடைய கருத்துகளை தலைவர்கள் கேட்டறிந்துள்ளனர்.
தற்கொலைக்கு சமம்
தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என, கட்சி நிர்வாகிகளில் பலரும் சொன்னாலும், 'தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறுவது தற்கொலைக்கு சமமானது; த.வெ.க., என்பது தமிழக அரசியலில் ஒரு குழந்தை.
'அக்குழந்தை இன்னும் தவழவே துவங்கவில்லை. அதற்குள் அக்குழந்தையை நம்பி, கூட்டணி சேர வேண்டும் என்பது சரியான அணுகுமுறையாக இருக்காது.
'தமிழகத்தில் குறைந்தபட்சம் 25 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை வைத்திருக்கும் பெரிய கட்சி தி.மு.க., அதற்கு அடுத்த நிலையில் இருப்பது அ.தி.மு.க., அக்கட்சி பா.ஜ.,வோடு கூட்டணி அமைத்திருக்கும்பட்சத்தில், அதனுடன் கூட்டணியாக செல்ல வாய்ப்பில்லை.
'அப்படிப்பட்ட சூழலில், பெரிய இயக்கம், கீழ்மட்ட அளவில் கட்டமைப்புள்ள இயக்கம் தி.மு.க., இன்றளவிலும் தமிழக காங்கிரசுக்கு அப்படிப்பட்ட கட்டமைப்பு எதுவும் இல்லாத நிலையில், தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேறினால், அது காங்கிரசை அதிக அளவில் பாதிக்கும்' என ஒரு சிலர் தங்களுடைய கருத்துகளை அழுத்தம் திருத்தமாக தலைவர்களிடம் பதிய வைத்துள்ளனர்.
தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என கூறியவர்கள், 'த.வெ.க., என்பது புதிய இயக்கமாக இருப்பதால், அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
'அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம் பிரமிக்கத்தக்க வகையில் உள்ளது. கூடும் கூட்டத்தில் பெரும்பகுதியினர், அக்கட்சிக்கு ஓட்டளித்தாலே, அக்கட்சி கூடுதல் சதவீத ஓட்டுகளை பெற முடியும். அதனால், த.வெ.க.,வோடு கூட்டணி சேருவது நமக்கு பலன் அளிக்கும்.
'தி.மு.க., கூட்டணியை பொறுத்தவரை, கடந்த சட்டசபை தேர்தலில் நாம் போட்டியிட்ட தொகுதிகளை மீண்டும் பெறுவதே, சிரமமாக இருக்கும்.
'த.வெ.க.,வுடன் சேர்ந்தால், 60 இடங்கள் வரை பெற முடியும்; 40 இடங்கள் வரை வெற்றி பெற முடியும். அதனால், தி.மு.க., கூட்டணியைக் காட்டிலும் த.வெ.க.,வுடனான கூட்டணியே சிறந்தது' என கூறிஉள்ளனர்.
நல்ல முடிவு
இருதரப்பு கருத்துகளையும் கேட்டறிந்த காங்கிரஸ் தலைவர்கள், 'கூட்டணி குறித்து, பொதுவெளியில் ஆளாளுக்கு பேசக் கூடாது. அனைவரின் கருத்துகளையும் கேட்டுள்ளோம். எல்லாருடைய எண்ணங்களுக்கும் ஏற்ப, காங்., தலைமை தமிழக கூட்டணி விஷயத்தில் நல்ல முடிவெடுக்கும்' என, தமிழக காங்., நிர்வாகிகளிடம் அழுத்தமாக சொல்லி அனுப்பி உள்ளனர்.
இதே கருத்தை, கூட்டம் முடிந்து வெளியே வந்த தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, தன்னுடைய பேட்டியாக வெளிப்படுத்தி உள்ளார்.
தமிழக காங்., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
டில்லிக்கு வந்திருந்த காங்., நிர்வாகிகளில் பெரும்பாலானோர், தங்களுடைய கருத்துகளை வெளிப்படையாக கார்கேவிடமும், ராகுலிடமும் சொல்லி விட்டனர். அவர்களும், பொறுமையாக எல்லாருடைய கருத்துகளையும் கேட்டுக் கொண்டனர். நல்ல முடிவெடுக்க வேண்டியது காங்., தலைமை தான்.
முன்னதாக, காங்., முன்னாள் தலைவர் ராகுலை, தமிழக காங்கிரசுக்காக சிலர் சந்தித்து பேசியுள்ளனர். அவர்களிடம் ராகுல் மனம் திறந்து பேசிஉள்ளார்.
அப்போது, 'தமிழக காங்கிரசில் இருப்போர் பெரும்பாலானோரின் மனநிலை, தற்போது இருக்கும் கூட்டணியில் மாற்றம் வேண்டும் என்பதாக உள்ளது. ஆனால், கள யதார்த்தம் வேறுவிதமாக இருக்கக்கூடும் என, தமிழகத்தில் இருக்கும் என் நண்பர்கள் வாயிலாக அறிய முடிகிறது.
'தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேறினால், அது தமிழக காங்கிரசை பெரிய அளவில் பாதிக்கும் என தெரிகிறது.
'அதனால், இந்த விஷயத்தில், காங்., தலைமை நிறைய யோசித்து தான் முடிவெடுக்க வேண்டும். காங்., முன்னாள் தலைவர் சோனியாவிடமும் இதுகுறித்து ஆலோசிக்க வேண்டும். அவருடைய எண்ணத்தையும் கேட்டுத்தான், முடிவெடுக்க வேண்டும்.
'தி.மு.க., கூட்டணியில் தொடர்ந்தாலும், வரும் சட்டசபை தேர்தலில், காங்., சார்பில் கூடுதல் எண்ணிக்கையில் கட்சியினர் போட்டியிடுவர்' என ராகுல் கூறியுள்ளார்.
இதன் அடிப்படையிலேயே, தமிழக காங்., நிர்வாகிகளுடனான சந்திப்புக்குப் பின், கட்சி சார்பில் பேட்டி அளித்த அகில இந்திய காங்., பொதுச் செயலர் வேணுகோபால் மற்றும் தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை இருவரும் கருத்து தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
-- நமது நிருபர் -

