பாலாறும், காவிரியாறும் வறளுதே; குட்டையாக மாறிய மேட்டூர் அணை
பாலாறும், காவிரியாறும் வறளுதே; குட்டையாக மாறிய மேட்டூர் அணை
UPDATED : மே 01, 2024 12:34 PM
ADDED : ஏப் 30, 2024 10:46 PM

தமிழகத்திற்கு பெரும் வாழ்வாதாரமாக திகழும் மேட்டூர் அணை நீர்மட்டம், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாதிக்கு பாதியாக குறைந்து வறண்டு காணப்படுகிறது.
வரலாறு காணாத வெயில், வறட்சி என நாளும் செய்தி வந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிக்கு குடிநீர் மற்றும் விவசாய ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணை நிலவரம் குறித்து அறிந்து வர ஒரு 'விசிட்' அடித்தோம்.
தொழிற்சாலைகள்
மேட்டூர் அணையின் வாயிலாக, தமிழகத்தில் சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளீட்ட 12 மாவட்டங்களில், 17.10 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பல மாவட்ட பொதுமக்களின் குடிநீருக்கும், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்கும், இந்த அணையின் நீர் தான் பயன்படுகிறது.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் போது, சுரங்க மின் நிலையம் வாயிலாக, 250 மெகாவாட் மற்றும் காவிரி ஆற்றில் ஏழு கதவணை மின் நிலையம் வாயிலாக, 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணைகளிலிருந்து தண்ணீர் வருகிறது; மேலும், பாலாறு வாயிலாகவும், மழைப்பொழிவு காரணமாகவும் நீர் ஆதாரம் பெருகுகிறது. மேட்டூர் அணை நீர் மட்டம் 120 அடி. கோடை காலத்தில் தண்ணீர் இருப்பு குறையும் போதெல்லாம், மக்கள் மனம் வாடும்.
பாதிக்கு பாதி
கடந்த 2023 ஏப்ரலில், அணையின் நீர்மட்டம் 101.49 அடியாக இருந்தது. நீர் இருப்பு 66.78 டி.எம்.சி.,யாக காணப்பட்டது. இந்த வருடம், அணை நீர்மட்டம் பாதிக்கு பாதியாகி, இப்போது 53.81 அடியாக உள்ளது. நீர் இருப்போ, 20.29 டிஎம்சி.,யாக இருக்கிறது. அணைக்கு ஒரு ஒடை போல, 82 கன அடி தண்ணீர் தான் வருகிறது. ஆனால், குடிநீர் தேவைக்காக 1200 கனஅடி திறக்கப்படுகிறது.
அணையின் பிரதான பகுதி வறண்டு போய் காணப்படுகிறது; அணையில் இருந்து, 39 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள பாலாறு, ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.
பாலாறும், காவிரி ஆறும் சங்கமிக்கும் இடத்தில் கால்நடைகள் தண்ணீர் தேடி பரிதாபமாக அலைகின்றன. அந்தப் பகுதியில் அகண்டு வரும் காவிரி ஒரு ஒடையை போல சுருங்கி காணப்படுகிறது. தண்ணீர் ஓடிய பகுதி பாளம், பாளமாக வெடித்துப் போயுள்ளது. அணையை சுற்றியுள்ள காடுகள் பசுமையை இழந்துள்ளன.
பரிசலுக்கு பதில் பஸ்
அணையின் பின்பக்கம் உள்ள பண்ணவாடி என்பது, பரிசல் பயணத்திற்கு பெயர் பெற்ற பகுதி. அணையில், 120 அடி தண்ணீர் தேங்கியிருக்கும் போது, இந்தப்பகுதி அப்படியொரு செழிப்புடன் காணப்படும். இப்போது நீர் தேங்கியிருக்கும் பகுதி குறைந்து அணையின் நீர் மட்டம் குறைந்துள்ளது; நீருக்குள் மறைந்திருந்த நந்தி சிலையும் முழுமையாக வெளியே தெரிகிறது.
அணையின் ஒரு பகுதியில், 500 மீட்டர் துாரத்தை பரிசல் வாயிலாக கடந்தால், தர்மபுரி மாவட்டத்தின் நாகமரை, ஏரியூர், நெருப்பூர், ஒகேனக்கல், பென்னாகரம் போன்ற பகுதிகளுக்கு செல்லலாம். அதேபோல, அந்தந்த ஊர்களிலிருந்து சேலம் மாவட்டத்தின் கொளத்துார், மேட்டூர் வருவதற்கு இந்தப் பரிசல் போக்குவரத்து பயன்படுகிறது.
இந்தப் பரிசல் பயணியரின் வசதிக்காக, அணையின் நீர்பிடிப்பு பகுதிக்குள்ளேயே அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அவ்வப்போது வந்து போகின்றன.
அந்தப்பகுதியை சேர்ந்தவர்களிடம் பேசிய போது, “எப்போதும் இல்லாத அளவு வெயில் உக்கிரமாக உள்ளது. இதன் தாக்கத்தால், பெரியளவில் நீர் பிடிப்பு பகுதிகள் வறண்டு வருகின்றன. இது போன்ற சந்தர்ப்பங்களில் கோடை மழை தான் எப்போதும் கைகொடுக்கும்; இப்போதும் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்,” என்றனர்.