நெஞ்சு பொறுக்குதில்லையே! பாரதியார் பல்கலை.,யில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி: கிடைத்தது 'டார்க் ரூம்' சாவி
நெஞ்சு பொறுக்குதில்லையே! பாரதியார் பல்கலை.,யில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி: கிடைத்தது 'டார்க் ரூம்' சாவி
UPDATED : ஆக 12, 2024 06:19 AM
ADDED : ஆக 11, 2024 10:39 PM

கோவை: கோவை பாரதியார் பல்கலையில், சமீபத்தில் அரங்கேறும் முறைகேடுகள் அதன் தரத்தை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளன. ஊழல் முறைகேடு, கொள்முதல் முறைகேடு புகார்கள் சார்ந்த, முக்கிய கோப்புகள் வைக்கப்பட்ட சாவி ஒளித்துவைக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை புகுந்து, சாவியை கைப்பற்றியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் மீது, நடவடிக்கை பாயும் என எதிர்பார்ககப்படுகிறது.
பல்வேறு புகார்களுக்கு உள்ளான, பல்கலையை சேர்ந்த துணைவேந்தர் பொறுப்பு குழு அதிகாரி ஒருவர், சாவியை வைத்துக்கொண்டு, அந்த அறையை திறக்க யாரையும் அனுமதிக்காமல் இருந்தது, பெரும் சர்ச்சையை சமீபத்தில் கிளப்பியது.
இந்நிலையில், மூன்று பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குழு, சில நாட்களுக்கு முன், பல்கலைக்கு சென்று, 'டார்க் ரூம்' சாவி குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரு நாள் முழுவதும் போராடியும், சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி சாவியை தர மறுத்துள்ளார்.
தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மிரட்டியபின், சாவி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சாவியை, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைத்து சென்றுள்ளனர்.
மீண்டும் விசாரணை
2018ம் ஆண்டு நடைபெற்ற பணிநியமன ஊழல் புகாரை மீண்டும், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை முடுக்கி விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தினந்தோறும் ஒரு அதிகாரி, பல்கலையில் கோப்புகளை ஆய்வு செய்து வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது.
காலியிடங்கள், முறைகேடு புகார்கள் தொடர்கதையாகியுள்ள சூழலில், துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர்களுக்கு மத்தியிலும், பிற முக்கிய பொறுப்பு வகிப்பும் அதிகாரிகளுக்கு மத்தியிலும், நேரடி மோதல் போக்கு எழுந்துள்ளது. இதனால், பேராசிரியர்களின் பணிச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிர்வாக பணிகள் ஸ்தம்பித்துள்ளன.
குறிப்பாக, துணைவேந்தர் பொறுப்பு குழுவில் உள்ள பல்கலையின் பெண் உறுப்பினர் மீது, பல புகார்கள் உறுதிசெய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்க, உயர்க்கல்வித்துறை செயலர் தயக்கம் காண்பிப்பது, பல்வேறு யூகங்களுக்கு வழிவகுக்கிறது.
கல்லுாரி மேம்பாட்டு கவுன்சில்
பாரதியார் பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள, 133 கல்லுாரிகளில் புதிய துறை துவங்குதல், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்தல் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளையும், கல்லுாரி மேம்பாட்டு கவுன்சில் கவனிக்கிறது. இதற்கு, இயக்குனர் நியமனத்தில் சீனியாரிட்டியில் 32வது இடத்தில் இருந்த நபரை நியமித்து முறைகேடு நடந்துள்ளது. தவிர, ஒவ்வொரு முறை கல்லுாரிகளில் 'இன்ஸ்பெக்ஷன் குழு' அமைக்கும் போதும், குறிப்பிட்ட சில நபர்களை அனுப்புவதாகவும், கல்லுாரி நிர்வாகத்தினரிடம் பணம் வசூல் செய்வதாகவும், புகார் எழுந்துள்ளது.
தன்னிச்சையான முடிவுகள்
பல்கலையின் பல்வேறு முக்கிய முடிவுகளை, துணைவேந்தர் பொறுப்பு குழுவில் உள்ள ஒரு நபர் மட்டுமே, தன்னிச்சையாக எடுப்பதாக புகார் எழுந்துள்ளது. 58 கவுரவ விரிவுரையாளர்கள் பணிநியமனத்தில், துணைவேந்தர் பொறுப்பு குழு பெண் உறுப்பினர் மீது, விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த விசாரணை குழு அமைப்பதிலும், கோப்புகளை கையாள்வதிலும் சம்மந்தப்பட்ட அதிகாரியின் தலையீடு அதிகம் உள்ளது. இருப்பினும், பொறுப்பில் தொடர உயர்கல்வித்துறை செயலர் அனுமதித்து இருப்பது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.
குறிப்பாக, அனைத்து முக்கிய குழுக்களிலும் தன்னைத்தானே பொறுப்பாளராக நியமித்துக்கொள்வதால், பல புகார்களின் விசாரணை கண்துடைப்பாக மாறியுள்ளது.
நிரப்பப்படாத காலியிடங்கள்
பாரதியார் பல்கலையில், 2022ம் அக்., மாதம் முதல் துணைவேந்தர் பணியிடம் காலியாகவுள்ளது. தவிர, பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, கல்லுாரி மேம்பாட்டு கவுன்சில் டீன், துணை பதிவாளர், தொலைதுார கல்வி மைய இயக்குனர், நிதி அலுவலர், பல்கலை பொறியாளர், உதவி பொறியாளர், மக்கள் தொடர்பு அதிகாரி உட்பட, 330 பணியிடங்கள் ஆண்டுக்கணக்கில் காலியாகவுள்ளன.
தற்போது, உயர்கல்வித்துறை செயலர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு, துணைவேந்தர் செயல்பாடுகளை கவனித்து வருகிறது. பல்கலையில் பல்வேறு புகார்கள், சர்ச்சைகள், முறைகேடுகள் தொடர்வதால், உரிய நடவடிக்கை எடுக்க பேராசிரியர்கள், பூட்டா உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
சிண்டிகேட் குழுவில் காலியிடங்கள்
பல்கலையின் முக்கிய அதிகாரம் கொண்ட சிண்டிகேட் குழுவில், பல்கலை தரப்பில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், இரண்டு பேராசிரியர் உட்பட நான்கு இடங்களும் காலியாக விடப்பட்டுள்ளன. அதே சமயம் ஒரு சில நபர்கள், 10 ஆண்டுகளுக்கும் மேல் சிண்டிகேட் பதவியை வைத்திருப்பதும், கேள்வியை எழுப்பியுள்ளது.
குவாட்டர்ஸ் கமிட்டி சர்ச்சை
பாரதியார் பல்கலையில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு குவார்ட்டர்ஸ் வழங்கப்படுவது வழக்கம். கடந்த ஓராண்டாக குவார்ட்டர்ஸ் ஒதுக்கீடு செய்யாமல் காலியாக விடப்பட்டதில், பல்கலைக்கு மாதந்தோறும், 1.5 லட்சம் ரூபாய் நிதியிழப்பு ஏற்பட்டது. தற்போது, தகுதியான நபருக்கு குவார்ட்டர்ஸ் ஒதுக்க அமைக்கப்பட்ட கமிட்டி, விதிமுறை மீறி அமைக்கப்பட்டுள்ளதாக பாரதியார் பல்கலை ஆசிரியர் சங்கம்(பூட்டா), உயர்கல்வித்துறை செயலருக்கு, புகார் மனு அனுப்பியுள்ளது.
இதுபோன்று எழும் புகார்களுக்கு பல்வேறு கட்ட விசாரணை கமிட்டி அமைத்து, ஆண்டுக்கணக்கில் பிரச்னைகளை இழுத்து, குற்றம் செய்பவர்களை காப்பாற்றும் வேலை மட்டுமே நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு உடனடியாக, பல்கலையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை, பரவலாக எழுந்துள்ளது.
இதுகுறித்து, பதிவாளர் (பொறுப்பு) ரூபா குணசீலன் கூறுகையில்,'' லஞ்ச ஒழிப்புத்துறை சார்ந்த விசாரணை நடப்பதால், அதுகுறித்து தற்போது தகவல்கள் எதுவும் அளிக்க இயலாது,'' என்றார்.