ADDED : பிப் 16, 2025 12:16 AM

புதுடில்லி: ராஜ்யசபாவில் பட்ஜெட் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா, 'தமிழகத்திற்கு பிரதமர் மோடி எதுவும் செய்யவில்லை' என, பெரிய பட்டியல் ஒன்றை படித்தார்.
இதற்கு நிர்மலா சீதாராமன் பதில் அளித்தபோது, தி.மு.க., - எம்.பி.,க்கள் குறுக்கிட்டனர். 'அமைதியாக உட்கார்ந்து கேளுங்கள்; அது உங்களது கடமை' என, ஒரு தலைமையாசிரியர் போல, மிரட்டும் தொனியில் பேசி, தி.மு.க., - எம்.பி.,க்களை உட்கார வைத்தார், நிதியமைச்சர்.
'மெட்ரோ ரயில் உட்பட, தமிழகத்திற்கு மத்திய அரசு எவ்வளவு திட்டங்களுக்கு பணம் கொடுத்திருக்கிறது' என்று, விபரமான பட்டியல் ஒன்றை வெளியிட்டு, 'எதற்கெடுத்தாலும் மோடி என சொல்வதை முதலில் நிறுத்துங்கள்' என கூறியதுடன், 'தி.மு.க., தான் தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றுகிறது' என்றும் தெரிவித்தார்.
இதை பேசி முடித்த பின், சக அமைச்சர்கள், நிதியமைச்சரை பாராட்டினர். இதையடுத்து, ராஜ்யசபாவின் தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் அலுவலகத்திலிருந்து நிதி அமைச்சருக்கு அழைப்பு வந்தது. அங்கு சென்ற நிர்மலாவிற்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது; ஏனெனில், பா.ஜ.,வின் தேசிய தலைவர் நட்டா அங்கிருந்தார்.
'நீங்கள் மிகவும் தைரியசாலியான பெண்மணி. ஒளிவு மறைவில்லாமல் பேசக்கூடியவர். இன்று அருமையாக பேசினீர்கள்' என, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், நிர்மலா சீதாராமனை பாராட்டினாராம். அதேபோல் தன் பங்கிற்கு நட்டாவும் பாராட்ட, ஒரு புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டாராம் நிர்மலா சீதாராமன்.