மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட மிரட்டினாரா திருப்பூர் தி.மு.க., மேயர்?
மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட மிரட்டினாரா திருப்பூர் தி.மு.க., மேயர்?
ADDED : டிச 23, 2025 08:06 AM

திருப்பூர்: குப்பை விவகாரத்தில், திருப்பூர் தி.மு.க., மேயர் தினேஷ்குமாரை விமர்சித்து, 'வீடியோ' வெளியிட்டதற்காக, விவசாயிகள் சங்க நிர்வாகி உட்பட பொதுமக்களை, மேயர் மிரட்டியதாக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறிய கருத்து, 'பற்றி' எரிகிறது. இருதரப்பிலும் வெளியான வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
திருப்பூர் மாநகரில் சேகரமாகும் குப்பையை, ஐகோர்ட் வழிகாட்டுதல் படி, இடுவாய், சின்னகாளிபாளையம் கிராமத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக கொட்ட, மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
இதற்கு, சின்னகாளிபாளையம், சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, முற்றுகை, தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது, சட்டம் - ஒழுங்கு பிரச்னையாக உருவெடுத்தது.
கண்டிக்கத்தக்கது
இப்பிரச்னை முற்றிய நிலையில், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்ட ஊர் மக்கள் சிலர், 'சின்னகாளிபாளையத்தில் குப்பை கொட்டக்கூடாது' என்ற கோரிக்கையை முன்வைத்து, திருப்பூர் மேயரை கடுமையாக விமர்சித்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதில், மேயரை தனிப்பட்ட முறையில் விமர்சித்ததை போராட்ட குழுவினரில் பலரும் விரும்பவில்லை. சில நாள் இடைவெளியில், மேயரை விமர்சித்த ஈஸ்வரன் உள்ளிட்ட சிலர், அவரிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது.
இதற்கிடையே, சமீபத்தில் சின்னகாளிபாளையம் கிராமத்தில் பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, கிராம மக்கள் மத்தியில் பேசும் போது, ஈஸ்வரன் உள்ளிட்டோரை மிரட்டி, மன்னிப்பு கேட்க செய்த மேயரின் செயல் கண்டிக்கத்தக்கது என, பேசினார்.
இது மேயரின் பழிவாங்கும் செயல் என்று விமர்சனம் எழுந்தது. திருப்பூர் இந்திய கம்யூ., - எம்.பி., சுப்பராயனும், மேயரின் செயல் பழிவாங்கும் நடவடிக்கையாக இருந்தால் கண்டிக்கத்தக்கது என, கூறியிருந்தார். இந்த விவகாரம், தற்போது அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அவமானம்
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் வீடியோவில் பேசியதாவது: மேயர் மீதான விமர்சனத்தை கிராம மக்களின் உணர்வாக தான் வெளிப்படுத்தினேன். இடுவாய் போராட்ட குழுவை சேர்ந்த, 15 பேர் மேயரை சந்திக்க சென்றனர்.
தன் குழந்தைகள் மீது சத்தியமாக, இடுவாய்க்கு குப்பை கொண்டு வரமாட்டேன் என்றும், தன்னையும், தன் தந்தையையும் விமர்சித்து நாங்கள் வெளியிட்ட வீடியோவால், அவருக்கு அவமானம் ஏற்பட்டு விட்டதாகவும், கட்சித்தலைமை வரை இந்த விவகாரம் சென்று விட்டதால், அவ்வாறு பேசியவர்கள் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும் என, மேயர் தினேஷ்குமார் கூறியுள்ளார்.
மன்னிப்பு கேட்க என் மனம் உடன்படவில்லை என்ற போதிலும், கிராம மக்களின் நலன் கருதி, மன்னிப்பு கேட்டு வீடியோ அனுப்பியிருந்தேன். அந்த வீடியோவில் தன் முகத்தை பதித்து, அவரது காலில் விழுந்து நாங்கள் மன்னிப்பு கேட்பது போன்ற ஒரு தோற்றத்தை, மேயர் ஆதரவாளர்கள் ஏற்படுத்தி, சமூக ஊடகங்களில் பரப்பி, எங்களை அவமானப்படுத்திவிட்டனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.

