தி.மு.க., ஆட்சிக்கு வந்ததே எங்களால் தான்; ஆதாரங்களுடன் பேசும் அரசு ஊழியர்கள்
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததே எங்களால் தான்; ஆதாரங்களுடன் பேசும் அரசு ஊழியர்கள்
ADDED : பிப் 18, 2024 03:32 AM

'தி.மு.க., கடந்த சட்டசபை தேர்தலில், 43 தொகுதிகளில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு, நாங்களும் எங்கள் குடும்பத்தினரும் காரணம் என்பதை அரசு உணர்ந்து, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், வரும் தேர்தலில் அதன் பலனை அனுபவிக்க நேரிடும்' என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்கத்தொகை, ஊதிய உயர்வு ஆகியவற்றை, உடனடியாக வழங்க வேண்டும்; ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டம் நடத்தப் போவதாக, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு மற்றும் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்தன.
கடந்த 10ம் தேதி, ஜாக்டோ - ஜியோ, மாவட்ட அளவில் வேலைநிறுத்தப் போராட்ட ஆயத்த மாநாடு நடத்தியது. கடந்த 15ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை அறிவித்தது. அதற்கு முந்தைய நாள், ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
அதைத்தொடர்ந்து, தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவதற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில், வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்தனர்.
இது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். போர்க்களத்தில் நிற்கும்போது, புறமுதுகிட்டு ஓடுவது வெறுப்பாக உள்ளதாக கூறும் அவர்கள், அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, தேர்தல் சார்ந்த புள்ளி விபரங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
அதன் விபரம்:
கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., 6,000க்கும் குறைவான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள், 29. இவற்றில் தி.மு.க., கூட்டணிக்கும் இரண்டாவதாக வந்த அ.தி.மு.க., கூட்டணிக்கும் இடையிலான மொத்த ஓட்டுகள் வித்தியாசம் 86,490.
இது தவிர, 10,000 ஓட்டுகளுக்கும் குறைவான வித்தியாசத்தில், 14 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற்றது. இவற்றில் மொத்த ஓட்டுகள் வித்தியாசம், 1 லட்சத்து 11,879.
அதாவது, தி.மு.க.,வை விட குறைவாக, 2 லட்சம் ஓட்டுகள் பெற்ற காரணத்தாலேயே, 43 தொகுதிகளை, அ.தி.மு.க., இழந்துள்ளது. அ.தி.மு.க., கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. அதோடு சேர்த்து, இந்த 43ஐயும் கைப்பற்றி இருந்தால், ஆட்சியை பிடித்திருக்கும்.
இந்த தொகுதிகளில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் தபால் ஓட்டுகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் ஓட்டுகளே, தி.மு.க., வெற்றிக்கு கைக்கொடுத்தன. இது புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோபத்தை தணிக்காவிட்டால், அது இந்த தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.
இவ்வாறு அவர்கள், தங்கள் குமுறலை கொட்டியுள்ளனர்.
- நமது நிருபர் -