குழு அமைக்காத தி.மு.க.,வால் மனம் வலிக்கிறது: காங்கிரஸ்
குழு அமைக்காத தி.மு.க.,வால் மனம் வலிக்கிறது: காங்கிரஸ்
UPDATED : பிப் 11, 2026 05:45 AM
ADDED : பிப் 11, 2026 05:40 AM

“கூட்டணியில் தொகுதி பங்கீட்டுக்கு பேச்சு நடத்த காங்., தரப்பில் குழு அமைத்து, 70 நாட்கள் ஆகிவிட்டன. தி.மு.க.,விலிருந்து அழைத்து பேசுவர் என காத்துக் கொண்டிருக்கிறோம். பேச்சு நடத்த குழு அமைக்காததால், காங்., தொண்டர்கள் மனம் வலிக்கிறது,” என, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் கூறினார்.
தமிழக காங்கிரசில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தலைவர்களின் கலந்தாய்வுக் கூட்டமும், பயிற்சி முகாமும் டில்லியில் நேற்று நடந்தது.
அதிருப்தி இல்லை
காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த எம்.பி.,க்கள் ராகுல், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டம் குறித்து தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி:
கூட்டத்தில், அனைத்து கிராமங்களிலும் காங்கிரஸ் கட்சி தேர்தல் பணியை முடுக்கிவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கூட்டணி குறித்த குழப்பம் எதுவும் காங்கிரசில் இல்லை. கூட்டணி குறித்துப் பேச தி.மு.க., சார்பில் இன்னும் குழு அமைக்காதது குறித்து, கட்சித் தலைமையிடம் எல்லாரும் வருத்தமாக குறிப்பிட்டனர்.
கடைசி நேரத்தில் களத்துக்கு செல்வது சரியாக இருக்காது என்பதால், தி.மு.க., சார்பில் குழு அமைக்க வலியுறுத்துகிறோம். முதல்வரையும் சந்தித்து, தி.மு.க., சார்பில் கூட்டணி பேச்சு நடத்த உடனே குழு அமைக்க வலியுறுத்த உள்ளோம்.
அப்போது, டில்லியில் தலைவர்களோடு பேசியது குறித்து எடுத்துச் சொல்வோம். மற்றபடி, தி.மு.க., மீது காங்கிரசுக்கு அதிருப்தி எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் கூறுகையில், “தமிழக காங்கிரஸ் சார்பில், தி.மு.க.,வுடன் பேச்சு நடத்த, கடந்த நவம்பரில் குழு அமைத்தோம். ''உடனே, பேச்சு நடத்த முதல்வர் ஸ்டாலினையும் சந்தித்தோம். இன்றோடு 70 நாட்கள் ஆகி விட்டன. எனவே, உடனடியாக எங்களை அழைத்து பேச வேண்டும்.
கோபம் இல்லை '' குழு அமைக்காமல் இருப்பது துரதிருஷ்டவசமானது. இதனால் எங்களுக்கு மனம் வலிக்கிறது. யார் மீதும் எங்களுக்கு கோபம் இல்லை,” என்றார்.
இதற்கிடையில், ராமேஸ்வரத்தில் தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி, நேற்று கூறுகையில், ' 'ஆட்சியில் பங்கு கேட்பதாக காங்கிரசில், சில தனி நபர்கள் கூறுகின்றனர். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. கூட்டணி தொடர்பாக தி.மு.க., - காங்., பேசி வருகிறது,'' என கூறினார்.
- நமது டில்லி நிருபர் -

