'நோகாமல் நுங்கு தின்ன' தயாராகும் மா.கம்யூ.,; சபரீசனிடம் கொந்தளித்த தி.மு.க.,வினர்
'நோகாமல் நுங்கு தின்ன' தயாராகும் மா.கம்யூ.,; சபரீசனிடம் கொந்தளித்த தி.மு.க.,வினர்
UPDATED : பிப் 14, 2026 10:23 AM
ADDED : பிப் 14, 2026 04:28 AM

மதுரை: 'மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் பிரச்னைக்கு முதலில் துாபமிட்ட மார்க். கம்யூ., சட்டசபை தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் களம் இறங்க அஞ்சி, மதுரை மேற்கு தொகுதியை குறிவைக்கிறது. 'திருப்பரங்குன்றம் தவிர மார்க்சிஸ்ட்டுக்கு வேறு தொகுதியை ஒதுக்கக்கூடாது' என முதல்வரின் மருமகன் சபரீசனிடம் தி.மு.க., நிர்வாகிகள் கொந்தளித்தனர்.
மதுரையில் 10 சட்டசபை தொகுதிகளிலும் வெற்றி நிலவரம் குறித்து சபரீசன் ஆலோசனை நடத்தினார். அமைச்சர் மூர்த்தி மாவட்ட செயலாளராக உள்ள வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மதுரை மேற்கு, கிழக்கு, மேலுார், சோழவந்தான் (தனி) தொகுதிகளின் நிலவரம் குறித்து பகுதி, ஒன்றிய செயலாளர்களிடம் ஆலோசனை நடத்தினார். அமைச்சர் மூர்த்தியும் பங்கேற்றார்.
அப்போது நிர்வாகிகள் பேசியதாவது: மதுரை வடக்கு மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெறும் சூழல் உள்ளது. அதேநேரம் இங்குள்ள மேற்கு தொகுதியை மார்க்சிஸ்ட் கேட்டு காய் நகர்த்துகிறது. திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள ஹார்விபட்டியில் வசிக்கும் அக்கட்சி எம்.பி., வெங்கடேசன், திருப்பரங்குன்றம் தீபத்துாண் பிரச்னையில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து 'கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்ற முயலுகின்றனர்' என சர்ச்சையாக பதிவிட்டு திருப்பரங்குன்றம் ஒட்டுமொத்த பிரச்னைக்கும் பிள்ளையார் சுழி போட்டார். இதன் மூலம் நமது அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தினார்.
தீபத்துாண் மற்றும் திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம் என்ற விவகாரத்தில் நீதிபதிகளை வெங்கடேசன் விமர்சித்தது அத்தொகுதி மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த மதுரை லோக்சபா தொகுதி மக்களின் அதிருப்திக்கு மா.கம்யூ., ஆளாகியுள்ளது.
இதனால் ஏற்கனவே போட்டியிட்ட திருப்பரங்குன்றத்தில் போட்டியிட தயங்கி, மதுரை மேற்கு தொகுதியை கேட்கிறது. இத்தொகுதி அமைச்சர் மூர்த்தி கட்டுப்பாட்டில் உள்ளதால், அவர் எப்படியும் வெற்றி பெற வைத்து விடுவார் என்ற 'நோகாமல் நுங்கு தின்னும்' கணக்கை மார்க்சிஸ்ட் போட்டுள்ளது.
முதல்வருக்கு எம்.பி., வெங்கடேசன் நெருக்கமானவர். உதயமான ஐ.ஏ.எஸ்., அதிகாரி நட்பால் நேரடியாக முதல்வரிடம் பேசி மேற்கு தொகுதியை பெற்றுத்தருவார்' என அக்கட்சியினர் நம்புகின்றனர். மார்க்சிஸ்ட் 'அரசியலில்' தி.மு.க., வீழ்ந்துவிடக் கூடாது. திருப்பரங்குன்றம் தொகுதியைதான் ஒதுக்க வேண்டும். முடியாதபட்சத்தில் மேலுார் தொகுதி ஒதுக்கலாம். இவ்வாறு கொந்தளித்துள்ளனர்.

