உக்கிரமாகும் பாலியல் வக்கிரம்! சீரழியும் சிறுவர், சிறுமியர்; தடுப்பது எப்படி?
உக்கிரமாகும் பாலியல் வக்கிரம்! சீரழியும் சிறுவர், சிறுமியர்; தடுப்பது எப்படி?
ADDED : பிப் 21, 2025 06:58 AM

பாலியல் குற்றங்கள் பெருகி, இளம் சிறார் மற்றும் இளைய தலைமுறையினர் சீரழிய ஆபாச இணையதளங்களும், சமூக வலைதளங்களுமே மிக முக்கிய காரணம் என்கின்றனர் போலீசார். ஆபாச இணையதளங்கள் மீதான கட்டுப்பாடுகள், பாலியல் குற்றவாளிகளுக்கான தண்டனைகளை கடுமையாக்குவதன் வாயிலாகவே பாலியல் குற்றங்களை தவிர்க்க முடியும் என்பதும் சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தலாக உள்ளது.
கோவை நகரில் வசிக்கும் ஒருவர் சமீபத்தில், தனது, 17 வயது மகளை காணவில்லை என, போலீசில் புகார் அளித்தார். போலீசார் தேடிவந்த நிலையில், அந்த சிறுமி மர்மமான முறையில் வீடு திரும்பினார். போலீசார் விசாரணையில், பிளஸ் 2 படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு பாட்டிக்கு துணையாக வீட்டிலிருந்த இவருடன், 'ஸ்நாப் சாட்' மூலம் கல்லுாரி மாணவர்கள் ஜெபின்,20 மற்றும் ரக்சித்,19 ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். அவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி நேரில் காண, தனது வீட்டில் இருப்பவர்களுக்கு கூட தெரியாமல் கோவைபுதுார் பகுதியில் உள்ள அந்த மாணவர்களின் அறைக்கு, 16ம் தேதி சென்றிருக்கிறார்.
தீபக்,20, அபினேஸ்வரன்,19, முத்து நாகராஜ்,19, யாதவராஜ்,19, நிதிஷ்,19 ஆகிய மேலும் 5 மாணவர்கள் இருந்துள்ளனர். ஏழு பேரும் மாணவியை அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். பின் சிறுமியை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பாட்டி வீட்டுக்கு அருகே இறக்கி விட்டு சென்றுவிட்டனர். போக்சோ வழக்கு பதியப்பட்டு, ஏழு மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த அறைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா, சிறுமி மட்டுமின்றி வேறு மாணவியர், பெண்களையும் பலாத்காரம் செய்துள்ளனரா என்றும் விசாரிக்கின்றனர்.
சமூக பிரச்னை
இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கூறுகையில், ''சிறுவர் - சிறுமியர் 15 வயதிலேயே பல விஷயங்களையும் கற்றுக்கொள்கின்றனர். சமூக வலைதளங்களில் மூழ்கி விடுகின்றனர். அதை எப்போது நிறுத்த வேண்டும் என்பதை தெரிந்திருக்க வேண்டும். மொபைல் போன், இன்டர்நெட் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட பிரச்னையாக பார்ப்பதை விட, இதை சமூகப் பிரச்னையாக பார்க்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மொபைல் போனுக்குள் தேவையானதும் இருக்கிறது; தேவையற்றதும் இருக்கிறது. அவற்றில் வளர்ச்சிக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ள வேண்டும். தவறான வழியில் கொண்டு செல்லும் விஷயங்களை சிறுவர், சிறுமியர் தவிர்க்க வேண்டும். பெற்றோரும் தங்களது குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் கண்காணிக்க வேண்டும்,'' என்றார்.
கண்காணிங்க...
மாநகர போலீஸ் துணை கமிஷனர் தேவநாதன் கூறுகையில், ''டிஜிட்டல் காலமாக இருக்கிறது. குழந்தைகள் மொபைல் போனில் எதை பார்க்கிறார்கள்; யாருடன் பேசுகிறார்கள் என்பதை பெற்றோர் கவனிக்க வேண்டும். குழந்தைகளுக்கு தொடுதல் குறித்து கற்றுத்தர வேண்டும். அவர்களின் மன நலம் எப்படி உள்ளது என்பதை கண்காணிக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி, அவர்களது அன்றாட நிகழ்வுகளை கேட்டறிய வேண்டும். குழந்தைகள் முன் சண்டை போடுவதை தவிர்க்க வேண்டும். மொபைல் போன் பயன்படுத்தும் குழந்தைகள், தங்களின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றக் கூடாது. சமூக வலைதளங்களில் மட்டுமின்றி, பள்ளி சென்று வரும் இடங்களில் அந்நிய நபர்களுடன் பேசுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் என்ன பார்க்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். முன் பின் தெரியாத நபர்களுக்கு மொபைல் எண் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பள்ளி, கல்லுாரிகளுக்கு தனியாக செல்லும் பட்சத்தில், அவர்களை கண்காணிக்க வேண்டும். உதவி மைய எண்: 1098 பற்றி குழந்தைகளுக்கு தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.
- நமது நிருபர் குழு -