sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

வந்தே மாதரம் என்போம்; பாரத தாயை வணங்குவோம்…!

/

வந்தே மாதரம் என்போம்; பாரத தாயை வணங்குவோம்…!

வந்தே மாதரம் என்போம்; பாரத தாயை வணங்குவோம்…!

வந்தே மாதரம் என்போம்; பாரத தாயை வணங்குவோம்…!

3


ADDED : நவ 06, 2025 08:16 AM

Google News

3

ADDED : நவ 06, 2025 08:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது சிறப்பு நிருபர்


வந்தே மாதரம்' தேசியப் பாடலின் 150வது ஆண்டு விழா நாளை (நவ. 7) துவங்குகிறது.

இந்தியாவின் தேசியப்பாடலான 'வந்தே மாதரம்' பாடலை இயற்றியவர் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி. முதல் இரண்டு வரிகள் சமஸ்கிருதத்திலும், அடுத்த வரிகள் வங்க மொழியிலும் எழுதப்பட்டன. 1882ல் இவரின் 'ஆனந்தமடம்' நாவலில் இப்பாடல் இடம் பெற்றது. இதை முதன்முதலாக 1896ல் கோல்கட்டா காங்., மாநாட்டில் வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்து பாடினார்.

இப்பாடல் சுதந்திர போராட்ட களத்தில் உத்வேகம் அளித்தது. சுதந்திரத்துக்குப்பின் 1950 ஜன. 24ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேசியப்பாடலாக அமலுக்கு வந்தது. தேசிய கீதமான 'ஜன கண மன' பாடலுக்கு நிகராக மதிக்கப்படுகிறது. சுதந்திரம், குடியரசு தினம், விளையாட்டு, ராணுவ நிகழ்ச்சிகளில் பாடப்படுகிறது.

கவிதை ஆர்வம்

'வந்தே மாதரம்' பாடலை எழுதிய பங்கிம் சந்திர சட்டர்ஜி 1838 ஜூன் 26ல் மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டா அருகே நைஹாட்டியில் பிறந்தார். இவரது தந்தை சப் கலெக்டராக பணியாற்றியவர்.இவருக்கு மூன்று சகோதரர்கள். படிக்கும் போதே கவிதைகள் எழுதினார். 1859ல் பி.ஏ., 1869ல் சட்டப் படிப்பு முடித்தார். அரசுப்பணியில் சேர்ந்தார். இவர் எழுதிய முதல் நாவல் 'துர்கேஷ் நந்தினி' 1865ல் வெளியானது.

பின் ஆனந்த மடம், கபால குண்டலா, பிஷ்பிரிக்சா உள்ளிட்ட பல்வேறு கதை, கட்டுரை, கவிதைகளை இயற்றினார். இலக்கியத்தின் வாயிலாக இந்திய கலாசாரத்தின் பெருமைகளை மக்களுக்கு உணர்த்தினார். 1872ல் 'வங்க தர்ஷன்' இதழை தொடங்கினார். இவரது படைப்புகள் பல்வேறு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. 1894ல் காலமானார். இவர் வசித்த மாளிகை 'பங்கிம் பவன்' என்ற பெயரில் சீரமைக்கப்பட்டது. இதில் நுாலகம், ஆய்வகம், கூட்ட அரங்கம் உள்ளன.

ஆங்கிலேயருக்கு அச்சம்

பங்கிம் சந்திர சட்டர்ஜி ஒரு முறை துர்கா பூஜை விடுமுறையில் கோல்கட்டாவில் இருந்து சொந்த ஊருக்கு (கந்தலபதா) ரயிலில் சென்றார். தேச சிந்தனையில் ஆழ்ந்திருந்த அவர் மனதை பசுமையான வயல்வெளி, நதிகள் கொள்ளை கொண்டன. அத்தருணத்தில் அவருக்கு தோன்றியதுதான் 'வந்தே மாதரம் ஸுஜலாம், ஸுபலாம்' என தொடங்கும் பாடல்.

இது முதன் முதலில் 1875ல் அவரது 'பங்க தர்ஷன்' நாளிதழில் வெளியானது.

* மத ரீதியாக மக்களை பிரிக்கும் நோக்கில் ஆங்கிலேயர் 1905ல் வங்காளத்தை இரண்டாக பிரிக்கும் 'வங்கப்பிரிவினை'யை அறிவித்தனர். இதை எதிர்த்து கோல்கட்டா டவுன்ஹாலில் ஒன்றிணைந்த 40 ஆயிரம் பேர் 'வந்தே மாதரம்' பாடி போராட்டம் நடத்தினர். இதைக்கண்டு அஞ்சிய கவர்னர் கர்சன், பாடலை பாடிய அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டார். 'வந்தே மாதரம்' பாடவும் தடை விதித்தார்.

தேசிய அங்கீகாரம்

மக்களின் விடுதலை உணர்வில் கலந்துவிட்ட 'வந்தே மாதரம்', ஆங்கிலேயரின் தடையை மீறி நாடு முழுதும் ஓங்கி ஒலித்தது. 1908ல் 18 வயதான சுதந்திர போராட்ட வீரர் குதிராம் போஸ், தூக்கிலிடும் போது 'வந்தே மாதரம்' என முழங்கியே நாட்டுக்காக உயிர் நீத்தார்.
* 1937ல் காங்., செயற்குழுவில், 'வந்தே மாதரம்' பாடல் தேசியப் பாடலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
* 1947 ஆக. 15 நள்ளிரவில் இந்தியா சுதந்திரம் பெற்ற போது, சுதேச கிருபாளனி 'வந்தே மாதரம்' பாடலை பாடினார்.
* 1950 ஜன. 24ல் அரசியல் நிர்ணய சபை கூட்டத்தில், 'ஜன கண மன' தேசிய கீதமாகவும், அதற்கு நிகராக விடுதலை போராட்டத்தின் சிறப்பு மிக்க 'வந்தே மாதரம்' (முதலிரண்டு பத்தி), தேசியப் பாடலாகவும் இருக்கும் என ராஜேந்திர பிரசாத் அறிவித்தார்.



கீதம் தந்த தாகூர்

'வந்தே மாதரம்' பாடிய ரவீந்திரநாத் தாகூர், தேசிய கீதமான 'ஜன கண மன' பாடலையும் இயற்றினார். கவிஞர், எழுத்தாளர், இசையமைப்பாளர், கதாசிரியர், ஓவியர், சமூக சீர்திருத்தவாதி என பன்முக திறமை கொண்டவர் ரவீந்திரநாத் தாகூர். 1861 மே 7ல் கோல்கட்டாவில் பிறந்தார். இந்திய இலக்கியத் துறைக்கு முக்கிய பங்களித்தவர். 1913ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். இவரது 'கீதாஞ்சலி' கவிதை தொகுப்பு பிரபலமானது. 'ஜன கண மன' பாடலை முதன்முதலில் 1911 டிச. 27ல் காங்., மாநாட்டில் பாடினார். 1950 ஜன. 24ல் நாட்டின் தேசிய கீதமாக இப்பாடல் அங்கீகரிக்கப்பட்டது. 1921ல் விஸ்வபாரதி பல்கலையை தொடங்கினார். 1941ல் மறைந்தார். இவர் வசித்த 'சாந்தி நிகேதன்' ஆசிரமம், யுனஸ்கோவின் பாரம்பரிய பண்பாட்டு சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.



மந்திர சொல்

* மகாத்மா காந்தி எழுதும் கடிதங்களின் தலைப்பில் 'வந்தே மாதரம்' என குறிப்பிட தொடங்கினார்.

* 'ஆனந்த மடம்' நாவலை முதலில் (1906ல்) ஆங்கிலத்தில் (தி அபே ஆப் பிளிஸ்) மொழி பெயர்த்தவர் கோல்கட்டாவின் நரேஷ் சந்திர சென் குப்தா.

* 'வந்தே மாதரம்' என்பது தேசபக்தியை ஊக்குவிக்கும் மந்திர சொல் என்ற ஸ்ரீ அரவிந்தர், 1909ல் இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

* 1905ல் ஹிரலால் சென் இயக்கிய 'வங்கப்பிரிவினை எதிர்ப்பு, சுதேசி இயக்கம்' தொடர்பான ஆவணப்படம், 'வந்தே மாதரம்' பாடலுடன் முடிவடையும்.

* 'வந்தே மாதரம்' பெயரில் 1939, 1985ல் தெலுங்கு 1948ல் மராத்தியில் படங்கள் வெளியாகின.

* 50வது சுதந்திர தினத்தில் (1997) ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான 'மா துஜே சலாம்' (தமிழில் 'தாய் மண்ணே வணக்கம்) பாடலில் 'வந்தே மாதரம்' வார்த்தை இடம் பெற்றது.

என்ன அர்த்தம்

'வந்தே மாதரம்' என்ற சொல், இந்திய மக்களிடம் விடுதலை உணர்வை தட்டி எழுப்பியது. இப்பாடல் தாய்நிலம், தாய் பற்றி விளக்குகிறது. 'தாய் மண்ணே வணக்கம்' என்பதே இப்பாடலின் பொருள்.



உலக சாதனை

மகாராஷ்டிரா நாக்பூரில் 2025 ஆக. 16ல் 30 ஆயிரம் பேர் இணைந்து 'வந்தே மாதரம்' பாடி 'கின்னஸ்' சாதனை படைத்தனர்.








      Dinamalar
      Follow us