இனி காதலர்களுக்கு கவலையில்லை திருமண சர்வீஸில் மார்க்சிஸ்ட் கம்யூ.,
இனி காதலர்களுக்கு கவலையில்லை திருமண சர்வீஸில் மார்க்சிஸ்ட் கம்யூ.,
ADDED : ஆக 26, 2025 04:16 AM

சென்னை: 'காதல் கல்யாணம் செய்ய விரும்புபவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களிலேயே நடத்தலாம்' என, அக்கட்சியின் மாநில செயலர் பெ.சண்முகம் அறிவித்துள்ளார்.
துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஐ.டி., ஊழியர் கவின், திருநெல்வேலியில் கடந்த மாதம் ஜூலை 27ம் தேதி ஆணவக் கொலை செய்யப்பட்டார். பட்டியலின இளைஞரான கவினை கொலை செய்த சம்பவத்தில், பெண்ணின் சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டார்.
கவின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, சப் - இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டார். ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள், முதல்வரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
இப்பின்னணியில், 'தமிழகத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகங்களில், காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம்' என, அக்கட்சியின் மாநில செயலர் சண்முகம் நேற்று தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் ஜாதி மறுப்பு திருமணங்கள் செய்து கொள்ள தனி ஏற்பாடு இல்லை. தமிழகம் முழுதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில், இனி யார் வேண்டுமானாலும் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம்.
காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன. திருநெல்வேலியில், ஒரே ஆண்டில் 240 கொலைகள் நடந்துள்ளன; இது பதிவு செய்யப்பட்ட கணக்கு. நிலைமை கை மீறி செல்கிறது. கொலைகாரனை தைரியமாகக் கொண்டாடுகிற சூழல் உள்ளது.
அதே சமயம், பொது சமூகத்தில் ஆணவக் கொலைக்கு எதிரான நிலை உருவாகி உள்ளது. இந்த சூழலை அரசு பயன்படுத்தி, ஜாதி ஆணவக் கொலை தடுப்பு சட்டத்தை, வரும் சட்டசபை கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.