முக்குலத்தோர் ஓட்டுகளை வளைக்க பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம்
முக்குலத்தோர் ஓட்டுகளை வளைக்க பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம்
ADDED : மார் 13, 2026 06:42 AM

- நமது நிருபர் -
தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகளை, தி.மு.க., விற்கு ஒருங்கிணைக்க, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை சுற்றுப்பயணம் செல்ல, தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், கடந்த மாதம் 27ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தார். அவர், முன்னாள் முதல்வர் என்பதால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று, முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை அவருக்கு வழங்கி உள்ளார். அவரது சுற்றுப்பயணம், தென் மாவட்டங்களில் அ.தி.மு.க.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என, தி.மு.க.,வினர் நம்புகின்றனர்.
தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும், தி.மு.க.,வில் ஐக்கியமான பின், தென் மாவட்டங்களில், ஜாதி ரீதியாக அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கள்ளர், மறவர் சமுதாயத்தின் முக்கிய தலைவர்களை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி திட்டமிட்டு புறக்கணித்தார் என்பதை, அச்சமுதாய மக்களிடம் எடுத்து சொல்ல பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார்.
தென் மாவட்டங்களில் மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி ஆகிய மாவட்டங்களில், அடுத்த வாரம் முதல் பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அவர் செல்லும் மாவட்டங்களில், முக்குலத்தோர் சமுதாயத் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். தென் மாவட்டங்களில் உள்ள, அ.தி.மு.க.,வினரை கரைத்து, தி.,மு.க.,வில் சேர்க்கவும் இந்தப் பயணத்தை அவர் பயன்படுத்திக் கொள்ள உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

