புனரமைப்பு என்ற பெயரில் பழமையான கோவிலை இடிக்க திட்டம்; அறநிலையத்துறை மீது குற்றச்சாட்டு
புனரமைப்பு என்ற பெயரில் பழமையான கோவிலை இடிக்க திட்டம்; அறநிலையத்துறை மீது குற்றச்சாட்டு
UPDATED : பிப் 17, 2026 11:47 AM
ADDED : பிப் 17, 2026 05:19 AM

நாமக்கல்: நாமக்கல் அருகே பழமையான கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் துர்கா மூர்த்தியிடம் ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார் நேற்று மனு அளித்தார்.
நாமக்கல் மாவட்டம், குமரமங்கலத்தில், 13ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட பொன்காளியம்மன் கோவில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவில், பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
பண்டிய குல வேட்டுவ கவுண்டர், துாரன் குல கொங்கு வேளாளர், குலாலர், நாவிதர், ஆதிதிராவிடர் உள்ளிட்ட சமுதாயத்தினர் குலதெய்வ கோவிலாக வழிபாடு செய்து வருகின்றனர்.

பண்டிய குல வேட்டுவ கவுண்டர் சமுதாயத்தினர், பூச்சாட்டுதல் முதல் திருநீறு எடுத்தல், முப்பாடு எடுத்தல், பொங்கல் வைத்தல், குதிரை பிடிப்பவர், முப்பாட்டுக்காரர், கிடா பிடிப்பவர், ஊஞ்சலாட்டுதல் உள்ளிட்ட முன்னுரிமை கொண்டுள்ளனர். இங்கு, 20 அடி உயர முனீஸ்வரர் கம்பீரமாக காட்சியளிக்கிறார்.
கருப்பணர், குதிரை பரிவார மூர்த்திகள், ஊஞ்சல் மண்டபம், பலி பீடம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் என, பழமையான அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த பழமையான கோவிலை இடிக்க, அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார், நாமக்கல் கலெக்டரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டம், குமரமங்கலத்தில், பழமையான பொன்காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் நிர்வாகத்தில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
அறங்காவலர் குழு மற்றும் நிர்வாகக் குழுவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே உள்ளதால், கோவிலை புனரமைக்கிறோம் என்ற பெயரில், கற்கோவிலை இடிக்க திட்டமிட்டு உள்ளனர்.
இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2024-ல் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, கடந்த டிசம்பரில் நடந்த பேச்சில், உயர் நீதிமன்ற உத்தரவு வரும் வரை பணியை துவங்கக்கூடாது என, ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் உறுதியளித்திருந்தார்.
பாலாலயம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, சென்னை நீதிமன்றத்தில் தற்போது மீண்டும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருச்செங்கோடு டி.எஸ்.பி., மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில், கடந்த 5ல் அமைதி கூட்டம் நடந்தது. கூட்டத்தில், உயர் நீதிமன்றத்தில் இருந்து தடை உத்தரவு பெற்றால் மட்டுமே பணி நிறுத்தப்படும்; இல்லையென்றால், வரும் 20ல் பாலாலயம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, பாலாலயம் நடத்த அனுமதி வழங்கியதை, அதிகாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
நீதிமன்ற இறுதி தீர்ப்பு வழங்கும் வரை, கோவில் இடிப்பு மற்றும் பாலாலயம் தொடர்பான அனைத்து பணிகளையும் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

