தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ மகனை சரியாக வளர்க்கவில்லை: விம்மி அழுத பா.ம.க., ராமதாஸ்

 மகனை சரியாக வளர்க்கவில்லை: விம்மி அழுத பா.ம.க., ராமதாஸ்

 மகனை சரியாக வளர்க்கவில்லை: விம்மி அழுத பா.ம.க., ராமதாஸ்


UPDATED : டிச 30, 2025 07:19 AM

ADDED : டிச 30, 2025 04:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 30, 2025 07:19 AM ADDED : டிச 30, 2025 04:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்: “அன்புமணியை நான் சரியாக வளர்க்கவில்லை. அதனால், ஈட்டியால் குத்துவதுபோல என் மார்பிலும், முதுகிலும் குத்துகிறான்,” என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கதறி அழுதார்.

ராமதாஸ் தரப்பினர் சார்பாக, பா.ம.க., பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. அதில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:

நான் வளர்த்தெடுத்த, நான் பொறுப்பு கொடுத்த பிள்ளைகள், என்னை மிக கேவலமாக துாற்றுகின்றனர். அன்புமணியை நான் சரியாக வளர்க்கவில்லை. அதனால்தான், ஈட்டியால் குத்துவதுபோல மார்பிலும், முதுகிலும் குத்துகிறான். அன்புமணிக்கு, தந்தையாக நான் எந்த குறையும் வைக்கவில்லை.

என்னை துண்டு துண்டாக வெட்டியிருந்தால் கூட சந்தோஷமாக போய் சேர்ந்திருப்பேன். ஆனால், சிலரை துாண்டிவிட்டு ஒவ்வொரு நாளும் என்னை அவமானப்படுத்துகிறான். அன்புமணியை மாற்ற முடியாது.

தற்போது, 95 சதவீத பா.ம.க.,வினர் என் பின்னால்தான் இருக்கின்றனர். அன்புமணி பின்னால், 5 சதவீதம் பேர்கூட இல்லை. ஆனால், கோடிக்கணக்கில் செலவு செய்து, கூட்டத்தை கூட்டி பம்மாத்து வேலை செய்து வருகின்றனர். வரும் தேர்தலில் அவர்களுக்கு சரியான பதில் கிடைக்கும்.

சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி அமைப்பதற்கான காலம் இன்னும் கனியவில்லை. கடந்த சில வாரங்களாக மாவட்டச் செயலர்களை அழைத்து, யாருடன் கூட்டணி அமைக்கலாம் என கருத்து கேட்டு வருகிறேன்.

அதன் அடிப்படையில் கண்டிப்பாக வெற்றி கூட்டணி அமைப்பேன். நான் நினைப்பது நிச்சயமாக நடக்கும் சூழல் வந்திருக்கிறது. சில நேரங்களில், துாக்க மாத்திரை போட்டாலும் துாக்கம் வருவதில்லை; அன்புமணி நினைவு வந்து விடுகிறது. பொதுக்குழு கூட்டத்துக்கு மண்டபத்தை கொடுக்கக்கூடாது என நடந்த சூழ்ச்சியையும் முறியடித்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

அன்புமணி குறித்து ராமதாஸ் பேசுகையில், மிகவும் உணர்ச்சிவயப்பட்டு, விம்மி அழுது, கண்ணீர் விட்டார். அவர் அருகில் இருந்த கட்சியின் செயல் தலைவரான அவரது மகள் ஸ்ரீ காந்தியும், கவுரவ தலைவரான ஜி.கே.மணியும், ராமதாஸ் கைகளை பிடித்து தேற்றினர்.

சவுமியா பதவி பறிப்பு

பா.ம.க., பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக ராமதாஸ், கவுரவ தலைவராக ஜி.கே.மணி, செயல் தலைவராக ஸ்ரீ காந்தி, ஆகியோரை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்க ராமதாசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. 'பசுமைத் தாயகம்' அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து, அன்புமணியின் மனைவி சவுமியா நீக்கப்பட்டு, ஸ்ரீ காந்தி நியமிக்கப்பட்டார். ஜாதிவாரி கணக்கெடுப்பு, டாஸ்மாக் கடைகளை மூடுதல், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



பீடை ஒழிந்தது; இனி நல்ல சகுனம்: அன்புமணி மீது ஸ்ரீ காந்தி கடும் தாக்கு

சேலத்தில் நடந்த பா.ம.க., பொதுக்குழுவில், அன்புமணியின் அக்காவும், கட்சியின் செயல் தலைவருமான ஸ்ரீகாந்தி பேசியதாவது:

பெற்ற பிள்ளையே சுயநலத்திற்காக தன்னை முதுகில் குத்திய ஏமாற்றத்தின் வலியால், ராமதாஸ் துடிக்கிறார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தால், நான் அவருக்கு பிறந்த நல்ல மகள் இல்லை. அதனால்தான் அரசியல் மேடைக்கு வந்திருக்கிறேன். இன்று, 'கோட் சூட்' அணிந்து, அன்புமணி காரில் வந்து இறங்குகிறார். அவர் படித்து வாங்கிய டாக்டர் பட்டம், கார், எம்.பி., பதவி, மத்திய அமைச்சர் பதவி என எல்லாமே அப்பா ராமதாஸ் போட்ட பிச்சை. அப்பாவின் உழைப்பில் சுகமாக வாழ்ந்தவர் அன்புமணி. ராமதாஸ் இல்லாத பா.ம.க., பிணத்திற்கு சமம். அந்த பிணத்தை வைத்து, அரசியல் நடத்த அன்புமணி நினைக்கிறார். ஆனால், ஸ்ரீ காந்தி உயிரோடு இருக்கும் வரை அது நடக்காது. பா.ம.க.,வை பிடித்திருந்த பீடை போய் விட்டது; இனி நல்ல சகுனம்தான். துரோகிகள், சுயநலவாதிகள் நம்மை விட்டுப் போய்விட்டனர். இனிதான் ராமதாசின் ஆட்டத்தை பார்க்கப் போகிறோம். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும். அந்த ஆட்சியில் பா.ம.க.,வுக்கு பங்கு வேண்டும். சட்டசபை தேர்தலில், 25 எம்.எல்.ஏ.,க்களுடன், ராமதாஸ் சட்டசபைக்குள் நுழைவார். இழந்த மாம்பழம் சின்னம் மீண்டும் நமக்கே வரும். அன்புமணிக்கு அதிகாரம் வேண்டுமானால், தனியாக கட்சி துவங்கி கொள்ளலாம். இனி, நான் சும்மா இருக்க மாட்டேன். ஊர் ஊராக, வீடு வீடாக வருவேன்; துரோகத்தை வீழ்த்த உறுதி ஏற்போம் ஜி.கே.மணி, சேலம் எம்.எல்.ஏ., அருள் ஆகியோரை, 'தி.மு.க., கைக்கூலி' எனக்கூறும் அன்புமணி தரப்பினர், ஆர்.எஸ்.எஸ்., அடிமைகள். இவ்வாறு அவர் பேசினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us