'கேப்டன் ரத யாத்திரை'க்கு அனுமதி தர போலீஸ் தாமதம்; தே.மு.தி.க., பரிதவிப்பு
'கேப்டன் ரத யாத்திரை'க்கு அனுமதி தர போலீஸ் தாமதம்; தே.மு.தி.க., பரிதவிப்பு
ADDED : ஜூலை 30, 2025 04:42 AM

சென்னை: கேப்டன் ரத யாத்திரைக்கு போலீஸ் அனுமதிக்காக, தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைமை பரிதவிப்புடன் காத்திருக்கிறது.
சட்டசபை தேர்தலில், தி.மு.க., அல்லது அ.தி.மு.க., கூட்டணியில் இணைய, தே.மு.தி.க., தலைமை முடிவு செய்துள்ளது. இரண்டு பக்கமும் கதவை திறந்து வைத்து, கூட்டணி பேச்சுக்கு காத்திருக்கின்றனர்.
இதற்கு இடைப்பட்ட நேரத்தில், கட்சியை பலப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இதற்காக, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, ஆகஸ்ட் 3 முதல், சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டியில் தன் பயணத்தை துவக்க உள்ளார்.
இதற்கு 'கேப்டன் ரத யாத்திரை' என்றும், 'உள்ளம் தேடி; இல்லம் நாடி' என, இரண்டு பெயர்கள் சூட்டப்பட்டு உள்ளன.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், கடலுார் மாவட்டத்தில், தே.மு.தி.க., மாநாடு நடக்க உள்ளது. இதில் கூட்டணி அறிவிப்பு வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிரேமலதாவின் சுற்றுப்பயணத்தின்போது, இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட, சிறிய ரதத்தை பயன் படுத்த உள்ளனர்.
அதேநேரம், திறந்த வாகனத்தில் நின்றபடி, பிரேமலதா மற்றும் கட்சியினர் சுற்றுப்பயணம் செல்ல உள்ளனர்.
இதற்கு அனுமதி கேட்டு, டி.ஜி.பி., அலுவலகத்தில், தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ், ஏற்கனவே மனு அளித்துள்ளார். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இதனால், தே.மு.தி.க., தலைமை பரிதவித்து வருகிறது.
திட்டமிட்டபடி பிரசாரம் தே.மு.தி.க., வெளியிட்ட அறிக்கை:
சட்டசபை தேர்தலுக்காக, தமிழகம் முழுதும், முதற்கட்ட சுற்றுப்பயணத்தை, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா துவங்க உள்ளார்.
வரும் 3ம் தேதி மதியம் 2:00 மணிக்கு, கோயம்பேடு கட்சி தலைமை அலுவலகத்தில், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
முதல் பிரசாரத்தை, கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பிள்ளையார் கோவிலில், மாலை 4:00 மணிக்கு துவக்குகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.