அமைச்சர் மீதான குவாரி வழக்கு விசாரணை; பிறழ் சாட்சிகளால் போலீசாருக்கு சலிப்பு
அமைச்சர் மீதான குவாரி வழக்கு விசாரணை; பிறழ் சாட்சிகளால் போலீசாருக்கு சலிப்பு
ADDED : மார் 02, 2025 09:28 AM

விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி உட்பட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.
வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட லோகநாதன் உடல் நலக்குறைவால் இறந்தார். இவ்வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் தற்போது வரை, 51 பேர் சாட்சியம் அளித்த நிலையில், 30 பேர் அரசு தரப்பிற்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.
நேற்று நடந்த வழக்கு விசாரணையின்போது, சதானந்தன், ஜெயச்சந்திரன், கோபிநாதன், கோதகுமார் ஆஜராகினர். அரசு தரப்பு சாட்சிகள் ஆஜராகவில்லை. இதையடுத்து மாவட்ட நீதிபதி மணிமொழி, விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் தொடர்ந்து பிறழ் சாட்சிகளாக மாறி வருவதும், முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வருவதும், வழக்கை விசாரிக்கும் போலீஸாருக்கு சலிப்பை ஏற்படுத்தி இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் கூறின.