ஒரே நாளில் ரூ.6500 கோடி வழங்கல்; ஆனால் எங்களுக்கு நிதி இல்லையா?: பகுதிநேர, இடைநிலை ஆசிரியர்கள் கேள்வி
ஒரே நாளில் ரூ.6500 கோடி வழங்கல்; ஆனால் எங்களுக்கு நிதி இல்லையா?: பகுதிநேர, இடைநிலை ஆசிரியர்கள் கேள்வி
UPDATED : பிப் 14, 2026 06:29 AM
ADDED : பிப் 14, 2026 05:15 AM

மதுரை: 'தமிழகத்தில் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து மகளிர் உரிமைத் தொகையாக ஒரே நாளில் ரூ.6500 கோடி வழங்க முடிந்த அரசுக்கு, பல ஆண்டுகளாக போராடும் பகுதிநேர, இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க நிதியில்லையா' என பகுதிநேர, இடைநிலை ஆசிரியர்கள் ஏக்கத்தில் உள்ளனர்.
தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளதாவது: இந்திய அரசியலமைப்பு விதியில் 'சம வேலைக்கு சம சம்பளம்' குறித்து தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் நிரந்தர பணியாளரா, தற்காலிக பணியாளரா என்ற பேதம் கிடையாது.
பஞ்சாப், ஹரியானா மாநில தற்காலிக பணியாளர்கள், தங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் குறைந்தபட்ச சம்பள விதியை கூட பூர்த்தி செய்யவில்லை என தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.எஸ்.காதர், எஸ்.ஏ.போப்டே அடங்கிய அமர்வு தீர்ப்பில், 'சமவேலை, சமஊதியம் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளனர்.
உபி., மாநில வழக்கு ஒன்றில்,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் பகுதிநேர ஆசி ரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி பங்கஜ் மிட்டல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதை பின்பற்றி தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 15 ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் பணியில் உள்ளனர்.
2016, 2021 தேர்தலில் தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தும் தற்போது வரை நடவடிக்கை இல்லை . பணி நிரந்தரத்திற்கு ரூ.240 கோடி, இடைநிலை ஆசிரியர்கள் சம்பள முரண்பாட்டை போக்க ஆண்டுக்கு ரூ.18 கோடி நிதியே தேவைப்படும்.
எனவே ஒரே நாளில் ரூ. 6500 கோடி ஒதுக்கியது போல் பிப்., 17 ல் தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்கி, இடைநிலை ஆசிரியர் சம்பள முரண்பாட்டை களையும் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

