பா.ஜ.,வுக்காக ஆர்.எஸ்.எஸ்., டில்லியில் களப்பணி ! : ஹரியானா, மஹா., போல வெற்றி கிட்டுமா?
பா.ஜ.,வுக்காக ஆர்.எஸ்.எஸ்., டில்லியில் களப்பணி ! : ஹரியானா, மஹா., போல வெற்றி கிட்டுமா?
ADDED : ஜன 04, 2025 11:29 PM

ஹரியானா, மஹாராஷ்டிராவில் பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைத்ததற்கு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு மேற்கொண்ட களப் பிரசாரம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதுபோல் டில்லியிலும், அந்த அமைப்பு தீவிர களப்பணியை துவக்கியுள்ளது, பா.ஜ.,வுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது. மொத்தம், 70 தொகுதிகள் உள்ள சட்டசபைக்கு அடுத்த மாதத்தில் தேர்தல் நடக்க உள்ளது.
இதற்கான தேதிகள் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற நிலையில், அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.
ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான ஊழல் வழக்கில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
வரும் தேர்தலில் வென்று, மக்களின் தீர்ப்பை பெற்றே, மீண்டும் முதல்வர் பதவியில் அமர்வேன் என்று அவர் சபதம் எடுத்துள்ளார்.
கவுரவ பிரச்னை
தொடர்ந்து மூன்று தேர்தல்களில் ஆம் ஆத்மி வென்ற நிலையில், தலைநகர் தங்களுக்கு கைகொடுக்காதது மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு பெரும் கவுரவ பிரச்னையாக உருவாகியுள்ளது.
இதனால், வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் பா.ஜ., ஈடுபட்டுள்ளது.
ஒரு பக்கம் அரவிந்த் கெஜ்ரிவால், பல இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இதனால், ஆம் ஆத்மியின் கடுமையான போட்டியை எதிர்கொள்ள, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் உதவியை பா.ஜ., நாடியுள்ளது.
ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா சட்டசபைகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில், ஹரியானாவில் அரசுக்கு எதிரான அதிருப்தி நிலவியபோதும், மொத்தமுள்ள, 90 தொகுதிகளில், 48ல் வென்று பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைத்தது.
அதுபோல, மஹாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகளின் மஹா விகாஸ் அகாடி கூட்டணியின் கடுமையான சவாலை, பா.ஜ., தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்., அடங்கிய மஹாயுதி கூட்டணி முறியடித்தது. மொத்தமுள்ள, 288 தொகுதிகளில், 228ல் இந்தக் கூட்டணி வென்றது. இதில் பா.ஜ., தனிப் பெரும் கட்சியாக விளங்கியது.
ஆதரவு அதிகரிப்பு
இந்த இரு மாநிலங்களிலும், பா.ஜ.,வின் வெற்றிக்கு பெரிதும் உதவியது, ஆர்.எஸ்.எஸ்., மேற்கொண்ட பிரசாரமே.
அந்த அமைப்பினர், தீவிரமாக களப்பணியாற்றினர். இது ஒட்டுமொத்தமாக ஓட்டு சதவீதம் உயர்வை உறுதி செய்ததுடன், பா.ஜ., கூட்டணிக்கான ஆதரவை அதிகரிக்கச் செய்தது.
தற்போது டில்லியிலும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் தங்களுடைய களப் பணியை துவக்கி விட்டனர்.
தேர்தலில் ஓட்டளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதே இவர்களது முக்கிய நோக்கம். மேலும், பா.ஜ.,வுக்கு எதிராக உள்ள மனநிலையை நீக்கும் வகையில், தகுந்த விளக்கங்களை அளித்து வருகின்றனர்.
மக்கள் தாங்களே முடிவை எடுக்கும் வகையில், இவர்களது பிரசாரம் அமைந்துள்ளது. நேரடியாக பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க கோராமல், மத்தியில் ஆளும் பா.ஜ., அரசின் திட்டங்களின் சிறப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதற்காக, தெருமுனை கூட்டங்கள், ஆலோசனை கூட்டங்கள் என, சிறிய சிறிய அளவில் மக்களை சந்தித்து விவாதித்து வருகின்றனர்.
இவ்வாறு டில்லியில், 13,000க்கும் மேற்பட்ட ஓட்டுச் சாவடிகள் அளவில் துவங்கி, மாவட்டங்கள் வரை என, பல நிலைகளில் தங்களுடைய பிரசாரத்தை ஆர்.எஸ்.எஸ்., நடத்தி வருகிறது; இந்த அமைப்பின் களப்பணி தங்களின் வெற்றிக்கு பெரிதும் உதவும் என பா.ஜ., தலைவர்கள் கருதுகின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -