சிறைகளில் நடக்கும் கொலைகளை தடுக்க தவறும் உளவு போலீசார்
சிறைகளில் நடக்கும் கொலைகளை தடுக்க தவறும் உளவு போலீசார்
ADDED : பிப் 05, 2025 05:09 AM

சென்னை : சிறைகளில் நடக்கும் கொலைகளை முன்கூட்டியே அறிந்து, தடுக்க வேண்டிய உளவு போலீசார், மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, சிறைகாவலர்கள் கூறியதாவது: ஜனவரி, 27ல், கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஏசுதாஸ் கொல்லப்பட்டார். அதற்கு முன், சென்னை புழல் மத்திய சிறையில் ரவுடிகள் பாக்ஸர் முரளி, வெல்டிங் குமார் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சிறையிலும், ஒரு கைதி கொல்லப்பட்டார். கைதிகளிடம் இருக்கும் முன்பகை மற்றும் மோதல் குறித்து முன்கூட்டியே, உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க, உளவுப்பிரிவு போலீசார் உள்ளனர். அவர்களில், 25 பேர் காவல் துறையை சேர்ந்தவர்கள். ஒன்பது பேர் சிறை துறையைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் தவிர, கியூ.ஆர்.டி., எனப்படும் தனிப்பிரிவு கமாண்டோ காவலர்கள் உள்ளனர். இவர்கள் சிறைகளில் உளவு தகவல்களை சேகரித்து, கொலைகளை தடுக்க வேண்டும். அவர்களின் அலட்சியம் காரணமாக, சிறைகளில் கொலைகள் நடந்து வருகின்றன.
சிறைகளில், ஒரு பிரிவுக்கு நான்கு காவலர்களாவது கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். ஆனால், தற்போது, நான்கு பிரிவுக்கு ஒரு காவலர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார். இதனாலும், கொலை மற்றும் தற்கொலைகளை தடுக்கமுடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.