ஒட்டுமொத்த சனியும் ஒன்று சேர்ந்த உருவம் சீமான்: அ.தி.மு.க., ஆவேசம்
ஒட்டுமொத்த சனியும் ஒன்று சேர்ந்த உருவம் சீமான்: அ.தி.மு.க., ஆவேசம்
ADDED : செப் 28, 2025 06:34 AM

சென்னை: 'ஒட்டு மொத்த சனியும், ஒன்று சேர்ந்த உருவம் சீமான்' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவரது பேட்டி:
எப்போதும் நட்பை மதிப்பவர்கள் அ.தி.மு.க.,வைச் சேர்ந்தோர். அதேநேரத்தில் மறைந்த தலைவர்களான அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஆகியோரை விமர்சிப்பதை, பொறுத்துக் கொள்ள மாட்டோம். அப்படி விமர்சித்த எவ்வளவோ பேர், எங்களிடம் செமத்தியாக வாங்கி கட்டிக் கொண்டதை அனைவரும் அறிவர்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அடிக்கடி ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று தெரியவில்லை. சிலருக்கு நாக்கில் சனி இருக்கும். சிலருக்கு ஜென்ம சனி இருக்கும்.
இன்னும் சிலருக்கு அஷ்டம சனி, ஏழரை சனி இருக்கும். இப்படி 'சனி'யில் எத்தனையோ விதம் இருக்கிறது. ஆனால், ஒட்டுமொத்த 'சனி'யும் ஒன்று சேர்ந்த உருவம்தான் சீமான்.
அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா குறித்து பேசுவதை, சீமான் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில், பதிலடி கடுமையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க., மாணவரணி செயலர் ராஜிவ் காந்தி அறிக்கை:
முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஆகியோரை தரம் தாழ்ந்து, சீமான் பேசியிருப்பது அநாகரிகத்தின் உச்சம். நடக்காத விஷயத்தை சொல்லி, அண்ணாதுரையை தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்தார்.
அவரின் வழித்தோன்றலாக, பா.ஜ., 'பி' டீமாக செயல்படும் சீமான், அதே வழியில் அண்ணாதுரையை கடும் சொற்களால் விமர்சித்திருக்கிறார்.
எப்போதும் ஊடக வெளிச்சம் என்ற போதையை தேடும், மனப்பிறழ்வும், சுயநல பித்தும், ஒழுக்கக்கேடும் கொண்ட ஒருவர், அண்ணாதுரை பெயரை கூட சொல்ல தகுதியற்றவர். வாய்க்கு வந்ததை எல்லாம் அடித்துவிடும் சீமான், கதையளக்கும், மனநோயாளியாக மாறி வருகிறார்.
மாடுகள், மரங்கள், மலைகளுடன் பேசிக் கொண்டிருக்கும் மன நோயாளிகளுக்கு, மனிதர்களிடம் பேசவே தெரியாது. நாக்கை வைத்து சீமான் வியாபாரம் செய்கிறார். அண்ணாதுரை மீது இனி ஒரு அவதுாறு சொல் வீசப்பட்டாலும், தி.மு.க., தொண்டர்களின் கோபக் கனலுக்கு ஆளாக நேரிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.