ADDED : நவ 26, 2025 06:17 AM

சென்னை: ''மேகதாது அணை கட்ட, கூட்டணி கட்சியான, கர்நாடக காங்கிரசுடன் இணைந்து, முதல்வர் ஸ்டாலின் சதி செய்கிறார்,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்படுகின்றனர்.
துணை முதல்வராக இருந்தபோது, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு, அனுமதி அளித்து, டெல்டா விவசாயிகளுக்கு துரோகம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின்.
கர்நாடகாவை ஆளும், தன் கூட்டணி கட்சியான காங்கிரசுடன் சேர்ந்து, மேகதாது அணை கட்ட, கூட்டு சதி செய்து, நாடகமாடும் முதல்வர் ஸ்டாலின்தான், டெல்டா விவசாயிகளின் துரோகி. சுய மரியாதையையும், உரிமையையும் காங்கிரசிடம் அடகு வைத்தது ஸ்டாலின்தான்.
ஒவ்வொரு ஆண்டும், நெல் பயிரிடப்படும் பரப்பு, விளைச்சலுக்கு ஏற்ப, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, தேவையான நிதி, சாக்கு, சுமை துாக்கும் பணியாளர்கள், லாரி போக்குவரத்து, சேமிப்பு கிடங்குகள் அமைத்து, கொள்முதல் செய்ய வேண்டியது அரசின் கடமை. ஆனால், தி.மு.க., அரசு அதை செய்யவில்லை.
குறுவை சாகுபடி காலத்தில், மழை பெய்யும் என்பதால், ஈரப்பதம் 22 சதவீதம் வரை இருக்கும். எனவே, அ.தி.மு.க., ஆட்சியில், மத்திய அரசிடம் விலக்கு பெற்று தந்தோம். ஆனால், முதல்வர் ஸ்டாலின் அதை செய்யாமல், மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டதாக நாடகம் ஆடுகிறார்.
'ரெட் ஜெயன்ட்' மீது ரெய்டு வந்தவுடன், டில்லி சென்று, விமான நிலையத்தில் மத்திய நிதி அமைச்சரை சந்தித்து, சமரசம் செய்த ஸ்டாலின், 39 எம்.பி.,க்களுடன் டில்லி சென்று, பிரதமரை சந்தித்து ஈரப்பதம் தளர்வு குறித்து பேசாதது ஏன்.
தன் சொந்த பிரச்னைகளுக்கு, டில்லிக்கு ஓடோடி செல்லும் ஸ்டாலின், விவசாயிகளின் பிரச்னையில் பாராமுகம் காட்டுவது ஏன்? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

