தெலுங்கானா முதல்வர் காட்டில் அடைமழை: அடுத்தடுத்த வெற்றிகளால் உற்சாகம்
தெலுங்கானா முதல்வர் காட்டில் அடைமழை: அடுத்தடுத்த வெற்றிகளால் உற்சாகம்
UPDATED : டிச 21, 2025 02:21 PM
ADDED : டிச 21, 2025 04:44 AM

- நமது சிறப்பு நிருபர் -
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி காட்டில் அடைமழை பெய்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் வெற்றி, முதலீட்டாளர்கள் மாநாடு, கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி நிகழ்ச்சி என, அடுத்தடுத்த நிகழ்வுகளால் அரசியலில், 'சிக்சர்' அடிக்கிறார்.
இடைத்தேர்தல் தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, தலைநகர் ஹைதரபாதில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் சட்டசபை தொகுதியில், நவம் பரில் இடைத்தேர்தல் நடந்தது.
பிரதான எதிர்க்கட்சியான முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ர சமிதி வசமிருந்த அத்தொகுதியை, காங்., தட்டி துாக்கியது.
இது, முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு காங்., மேலிடத்தில் நல்ல பெயரை பெற்று தந்தது.
இந்த உற்சாகத்தோடு, உள்ளாட்சி தேர்தலை நடத்தவும் அவர் இசைவு தெரிவித்தார். அதன்படி, 12,719 கிராம பஞ்சாயத்துகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்தது.
இதில், 65 சதவீத கிராம பஞ்சாயத்துகளை, அதாவது, 7,093 இடங்களை காங்., கைப்பற்றி உள்ளது.
பாரத் ராஷ்ட்ர சமிதி - 3,488; பா.ஜ., 699 இடங்களை மட்டுமே கைப்பற்றின. இதன் மூலம், தெலுங்கானா அரசியலில் தனக்கென தனி முத்திரையை ரேவந்த் ரெட்டி பதித்துள்ளார்.
இந்த வெ ற்றியோடு, ஹைதராபாதில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியை அவர் பிரமாண்டமாக நடத்தினார். இதில், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலையும் அவர் ப ங்கேற்க வைத்தார்.
கால்பந்து பிரியரான ரேவந்த் ரெட்டி, மெஸ்ஸி உடன் கால்பந்து விளையாடி யதும் தேசிய அளவில் கவனத்தை பெற்றது.
இதன்பின், ராகுலுடன் தனி விமானத்தில் டில்லி சென்ற ரேவந்த் ரெட்டி, கட்சி மேலிடத்தின் முழு ஆதரவும் தனக்கு இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.
நானே தொடருவேன் உள்ளாட்சி தேர்தல் மற்றும் விளையாட்டு துறையில் சாதித்ததை அடுத்து, பொருளாதார ரீதியாகவும் முதல்வர் ரேவந்த் ரெட்டி அசத்தியுள்ளார்.
தெலுங்கானா முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய அவர், 5.75 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து உள்ளார்.
தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார்.அதற்கு போட்டியாக, உலகத்தரத்தில் முதலீட்டாளர்கள் மாநாட்டை ரேவந்த் ரெட்டி நடத்தி காட்டினார்.
தொடர் வெற்றிகளால் உற்சாகமடைந்துள்ள முதல்வர் ரேவந்த் ரெட்டி, பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், “அடுத்த 10 ஆண்டுகளுக்கு தெலுங்கானாவின் முதல்வராக நானே தொடருவேன்,” என்றார்.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி, முதலீட்டாளர்கள் மாநாடு, கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி நிகழ்ச்சி என அடுத்தடுத்த நிகழ்வுகளால், அரசியலில் சிக்சர் அடித்த முதல்வர் ரேவந்த் ரெட்டி, அடுத்த மாதத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் நடத்த திட்டமிட்டுள்ளார்.

