தொகுதி பொறுப்பாளர் நியமனம்; தமிழக பா.ஜ.,வில் தாமதம் ஏன்?
தொகுதி பொறுப்பாளர் நியமனம்; தமிழக பா.ஜ.,வில் தாமதம் ஏன்?
ADDED : ஆக 09, 2025 04:02 AM

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளில், சட்டசபை தொகுதி வாரியாக நடக்கும் பணிகளை மேற்பார்வையிட, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், தமிழக பா.ஜ.,வில் இன்னும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், சட்டசபை தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து, தேர்தல் பணிகளை கவனித்து வருகிறது.
ஆனால், பா.ஜ.,வில் இன்னும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை. அதற்கு சரியான, தகுதியான ஆட்கள் இல்லாததே காரணம்.
அதனால், கட்சிக்காக தீவிரமாக களப்பணியாற்றும் நபர்கள் யார் என பார்த்து, அவர்களை தேர்ந்தெடுத்து தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும். அவர்களை, மாவட்டத் தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.
தொகுதி பொறுப்பாளர்கள், அங்குள்ள நிர்வாகிகளை, தொண்டர்களை சந்தித்து, கோரிக்கைகளை கேட்டறிய வேண்டும். அவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். வாரந்தோறும் பூத் கமிட்டி வாரியாக சென்று, பூத் கமிட்டி நிர்வாகிகளின் பணிகளை கண்காணிக்க வேண்டும்.
முக்கிய ஓட்டு வங்கியாக உள்ள எஸ்.சி., சமூக மக்களை சந்தித்து, அவர்களின் தேவைகளை கேட்டறிந்து, உதவ வேண்டும். கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து, கூட்டங்கள் நடத்த வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.