கமிஷனுக்காக தனியாரிடம் ஒப்படைப்பா? காலை சிற்றுண்டி திட்டம் குறித்து சீமான்
கமிஷனுக்காக தனியாரிடம் ஒப்படைப்பா? காலை சிற்றுண்டி திட்டம் குறித்து சீமான்
UPDATED : ஏப் 17, 2025 02:47 AM
ADDED : ஏப் 16, 2025 06:21 PM

சென்னை:'கமிஷனுக்காக காலை சிற்றுண்டி தயாரிக்கும் பணி, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதா' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகம் முழுதும் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும், 65,000 சத்துணவு மையங்களில், 1.95 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். கடந்த, 40 ஆண்டுகளாக பணியாற்றும் சத்துணவு ஊழியர்களின் பணி, காலமுறை ஊதிய அடிப்படையில் நிலைப்படுத்தப்படவில்லை.
அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் எதுவும் முறையாக வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு பள்ளியிலும், அரசு நியமித்த சத்துணவு பணியாளர்கள் பணிபுரியும் நிலையில், பள்ளிகளில் புதிதாக துவங்கப்பட்ட காலை சிற்றுண்டி தயாரிப்பு பணியை, தி.மு.க., அரசு ஏன் தனியாருக்கு வழங்கியது?
தனியார் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் கமிஷன் தொகைக்காகவா அல்லது சத்துணவு திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முன்னோட்டமா என்ற கேள்வி எழுகிறது.
மேலும், தமிழக முழுதும் 60,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றால், பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குவதில் பெரும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, காலிப் பணியிடங்களை நிரப்புவதுடன், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும். அவர்களுக்கு முறையான ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.