ஜாபர் சாதிக் தொழில் சாம்ராஜ்யம் :டில்லி அதிகாரிகள் விசாரணையில் புதிய திருப்பம்
ஜாபர் சாதிக் தொழில் சாம்ராஜ்யம் :டில்லி அதிகாரிகள் விசாரணையில் புதிய திருப்பம்
ADDED : மார் 04, 2024 11:31 PM

சென்னை :சென்னை பர்மா பஜாரில் திருட்டு, 'சிடி' விற்ற ஜாபர் சாதிக்கின் போதை பொருள் தொழில் சாம்ராஜ்யம் குறித்தும், சமீபத்தில் அவர் மேற்கொண்ட கென்யா நாட்டு பயணம் குறித்தும், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சர்வதேச போதை பொருள் கடத்தல்காரரும், தி.மு.க.,வின், சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி முன்னாள் துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக், 36, என்பவரை, டில்லியை சேர்ந்த மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், தமிழகத்தில்முகாமிட்டு, தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.
ஜாபர் சாதிக்கின் போதை பொருள் கடத்தல் தொழில் சாம்ராஜ்யம் குறித்து, பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:சென்னை பர்மா பஜாரில் திருட்டு, 'சிடி' விற்று வந்த ஜாபர் சாதிக்கிற்கு, 2006ல், சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த, சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர் முகமது சாதிக் பாட்ஷாவின் நெருங்கிய நட்பு கிடைத்தது.
இவர் தான், போதைப் பொருள் கடத்தல் தொழிலுக்கு ஜாபர் சாதிக்கின் குரு. துவக்கத்தில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இவர்கள், பின், எல்.எஸ்.டி., மற்றும், 'மெத்தாம்பேட்டமைன்' உள்ளிட்ட போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டனர். பின், தொழில் போட்டி காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.
ஜாபர் சாதிக், தன் சகோதரர் முகமது சலீம், உறவினர் நுாருதீன், நண்பர்கள், அப்துல்லா ரஹீம் ஜின்னா உள்ளிட்டோருடன் சேர்ந்து போதைப் பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட துவங்கினார்.கடந்த, 2009ல், முகமது சலீம், அப்துல்லா ரஹீம் ஜின்னா மற்றும் நுாருதீன் ஆகியோர், மலேஷியாவுக்கு, 'கேட்டமைன்' எனப்படும் போதை பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
அப்போது தான், இவர்களின் தலைவனாக ஜாபர் சாதிக் செயல்படுவது தெரியவந்தது.
இதையடுத்து, 2013ல், ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். பின், அவரது குருவான முகமது சாதிக் பாட்ஷாவும் கைது செய்யப்பட்டார். சென்னை, மும்பை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போது தான், ஜாபர் சாதிக் தொழில் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்தினார். ஜாமினில் வெளி வந்த பின், போலீசாரிடம் சிக்காமல் இருக்க, துபாயில் மூன்று ஆண்டுகள் பதுங்கி இருந்தார்.
அதன்பின், 2019ல், மலேஷியாவுக்கு, 38 கிலோ கேட்டமைன் என்ற போதைப் பொருள் கடத்திய வழக்கில், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கைது செய்யப்பட்டார்.
சிறையில் இருந்து வெளிவந்த பின், தமிழகத்தில் இருந்தபடி மீண்டும் தன் ஆட்டத்தை துவக்கினார்.போதை பொருள் கடத்தலுக்காவே, உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்வது போல, 'ஜூகோ ஓவர்சீஸ்' எனும் நிறுவனத்தை துவங்கினார். இதில், கோலிவுட்டை சேர்ந்த பிரபல இயக்குனரும் தொழில் பார்ட்டனாக இருப்பது தெரிய வந்துள்ளது.
இவர்களின் நிறுவனத்தில், அகமது முஸ்ரப் என்ற அப்துல் காதர், பிப்., 15ல், டில்லியில் கைதான, சென்னையைச் சேர்ந்த முகேஷ்; முஜிபுர் ரஹ்மான்; அசோக்குமார் ஆகியோர் வேலை பார்த்துள்ளனர்.இவர்கள் வாயிலாக, வெளிநாடுகளுக்கு மெத்தாம்பேட்டமைன் போதை பொருள் தயாரிக்க பயன்படுத்தும், 'ஸூடோஎபிட்ரின்' கடத்தி, பல கோடி ரூபாய் சுருட்டியுள்ளார்.
ஜாபர் சாதிக்கிற்கு எதிராக, பாஸ்போர்ட் முடக்கம், 'லுக் அவுட்' நோட்டீஸ் வெளியீடு என, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
இதிலிருந்து தப்பிக்க, முக்கிய கட்சியின்தலைமைக்கு நெருக்கமாக நபராக மாறினார்.சினிமா தயாரிப்பாளர், ஹோட்டல் அதிபர் என நடித்து, நடிகர், நடிகையர், ஐ.பி.எஸ்., அதிகாரிகள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் என, அனைவரிடமும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அவரது தொழில்
சாம்ராஜ்யம் குறித்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
வீட்டை படம் பிடித்த மர்ம நப ர்கள்
சென்னை சாந்தோம் அருளானந்தம் தெருவில் ஜாபர் சாதிக்கின் வீடு உள்ளது. இதற்கு, டில்லி மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், 'சீல்' வைத்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, ஜாபர் சாதிக்கிற்கு, 'சம்மன்' வழங்கிய நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். இதை மர்ம நபர்கள் நேற்று படம் படித்துள்ளனர். ஜாபர் சாதிக் தாய் தான் படம் பிடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள, ஜாபர் சாதிக்கிற்கு தகவல் அனுப்ப படம் பிடித்து அனுப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது என, அதிகாரிகள் கூறினர்.

