ADDED : ஜூலை 20, 2026 05:33 PM
புதுச்சேரி: காட்டேரிக்குப்பத்தில் முன்விரோதம் காரணமாக கேமரா டெக்னீசியனை கத்தியால் வெட்டிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காட்டேரிக்குப்பம் அடுத்த சந்தைப்புதுக்குப்பம், அருள்முருகன் நகரை சேர்ந்தவர் வினோத், 34; சி.சி.டி.வி.கேமரா டெக்னீசியன். இவருக்கும், அதே கிராமம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பிரகாசம் மகன் பிரபாகரன், 37; என்பவருக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் வினோத் ஐய்யனாரப்பன் கோவில் அருகே நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தபோது, அங்கு வந்த பிரபாகரன் மற்றும் அவரது நண்பர்களான கர்ணம் வீதியை சேர்ந்த ஆதிசிவம் மகன் வினித்குமார்,19; பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த மணிகண்டன் மகன் யோகதனேஷ், 18; ஆகியோர் கத்தியால் தலை மற்றும் கையில் வெட்டியிட்டு, இதனை போலீசில் தெரிவித்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதில், படுகாயமடைந்த வினோத்தை அருகிலிருந்தவர்கள் மீட்டு, வானுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, முதலுதவி அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் வினோத் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து வினோத் அளித்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீசார் பிரபாகரன், வினித்குமார், யோகதனேஷ் ஆகியோரை நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
