ADDED : ஆக 05, 2026 05:52 PM
வில்லியனுார்: வில்லியனுார் அருகே காரில் வைத்து மாணவர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
வில்லியனுார் அடுத்த அரசூர் பகுதியில் மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு நேற்று முன்தினம் இரவு கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையில் சென்ற போலீசார் அரசூர் மெயின் ரோட்டில் நின்றிருந்த மாருதி ஸ்விப்ட் காரில் இருந்த நான்கு பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் அரசூர் செல்வம் மகன் தினேஷ், 20; கோபால் மகன் குணசேகரன், 21; செல்வம் மகன் கவியரசன், 19; தீப்பாய்ந்தான் மகன் அபிேஷக், 24, ஆகியோர் என, தெரியவந்தது.
மேலும் காரில் சோதனை செய்தபோது உள்ளே மறைத்து வைத்திருந்த 200 கிராம் கஞ்சா பாக்கெட்டுகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். விசாரணையில், நான்கு பேரும் கல்லுாரி மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து நால்வரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.
