தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் இ.கம்யூ., போட்டியிடுவது உறுதி
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் இ.கம்யூ., போட்டியிடுவது உறுதி
ADDED : செப் 09, 2026 06:23 PM
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத் தேர்தலில் இ.கம்யூ., போட்டியிடுகிறது.
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் களம், தற்போது பலமுனைப் போட்டியால் உச்சக்கட்ட அரசியல் சூட்டை ஏற்படுத்தியுள்ளது.
ஆளும் என்.ஆர்.காங்., சார்பில் அசோக் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்தல் களப்பணிகளை தொடங்கிவிட்டார். மற்றொரு புறம், த.வெ.க., ஆதரவோடு நேயம் மக்கள் கட்சி வேட்பாளராக விநாயகமும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார். இதற்கிடையில், தி.மு.க-வும் தனது வேட்பாளரை களமிறக்கத் தயாராகி வருகிறது.
தமிழகத்தில் மதச்சார்பற்ற கூட்டணி உடைந்த சூழலில், புதுச்சேரி இந்திய கம்யூ., கட்சியும் தட்டாஞ்சாவடியில் தனித்துப் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம் தலைமையில், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொகுதியின் முக்கியப் பிரமுகர்களையும் வாக்காளர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
கடந்த சட்டசபை தேர்தலின்போது இந்திய கம்யூ., போட்டியிட முடிவு செய்து மனுத்தாக்கல் செய்தபோதிலும், கடைசி நேரத்தில் வேட்பு மனுவை வாபஸ் பெற்றது. ஆனால், இந்த முறை இடைத்தேர்தலில் எக்காரணம் கொண்டும் பின்வாங்காமல் போட்டியிடுவது என்ற முடிவில் கட்சித் தலைமை தீர்க்கமாக உள்ளது.
இது குறித்து இ.கம்யூ., நிர்வாகிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் இ.கம்யூ., தற்போது அங்கம் இல்லை. த.வெ.க., அரசுக்கு வெளியிலிருந்தே தனது ஆதரவை வழங்குகிறது.
எங்களது தேசிய அரசியலைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மாநிலத்தின் சூழலுக்கு ஏற்பவே நகர்வுகள் அமையும். உதாரணத்திற்கு, கேரளாவில் காங்கிரசை எதிர்த்தே கட்சி களமிறங்குகிறது. அதேபோலத்தான் புதுச்சேரியிலும் இந்த இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளோம்.
முந்தைய ரெட்டியார்பாளையம் தொகுதி எப்போதுமே இந்திய கம்யூ., வலுவான கோட்டையாக விளங்கியது. தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு, பழைய ரெட்டியார்பாளையம் தொகுதியின் 75 சதவீதப் பகுதிகளை உள்ளடக்கியே தட்டாஞ்சாவடி தொகுதி உருவாக்கப்பட்டது. இதனால், இத்தொகுதியில் இன்றும் எங்களுக்கு வலுவான ஓட்டு வங்கி இருக்கிறது. எனவே இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றோம்’ என்றனர்.
அனைத்து அரசியல் கட்சிகளும் முழு வீச்சில் தயாராகி வரும் அரசியல் நகர்வுகளால், வரவிருக்கும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் களம் கடும் போட்டியைச் சந்திக்கவுள்ளது நிச்சயம்.
