புதுச்சேரியில் சட்டசபை கூட்ட தொடர் 15 நாட்கள் நடத்திட வலியுறுத்தல்
புதுச்சேரியில் சட்டசபை கூட்ட தொடர் 15 நாட்கள் நடத்திட வலியுறுத்தல்
ADDED : ஆக 07, 2026 05:31 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 16வது சட்டசபை கூட்ட தொடரை குறைந்த பட்சம் 15 நாட்களாவது நடத்த வேண்டும் என, நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவரது அறிக்கை:
புதுச்சேரியில் 2026ம் ஆண்டிற்கான சட்டசபை தேர்தல் முடிந்து புதிய ஆட்சி பொறுப்பேற்று நீண்ட இழுபறிக்கு பின் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சபாநாயகர் தேர்தல் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு தற்போது வரை நடத்தாமல் உள்ளது. அண்டை மாநிலங்களில் சட்டசபை கூட்டம் கூட்டப்பட்டு, பட்ஜெட் கூட்ட தொடர்கள் சிறப்பாக நடந்து வருகிறது. ஆனால், புதுச்சேரியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு செயல்பாட்டில் இல்லாதது கண்டிக்கத்தக்கது.
சட்டசபையில் இந்த ஆகஸ்ட் மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து மக்கள் பணி மற்றும் அரசு துறைகளின் செலவினங்களுக்கான தொகையை ஒதுக்கி நடைமுறைபடுத்த வேண்டும். இதற்கான கால அவகாசம் மிக குறைவாக உள்ளது. இந்தாண்டிற்கான நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்க சட்டசபை கூட்டும் போது கவர்னரின் உரை நடைபெற வேண்டும். அதன் மேல் எம்.எல்.ஏ.,க்கள் பேச வாய்ப்பளிக்க வேண்டும். இதற்கு குறைந்த பட்சம் 15 நாட்களாவது சட்டசபை கூட்ட தொடரை நடத்த வேண்டும் என, தெரிவித்துள்ளார்.
