ஆடிப்பருவத்திற்கான காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கல்
ஆடிப்பருவத்திற்கான காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கல்
ADDED : ஆக 03, 2026 05:53 PM
புதுச்சேரி: வேளாண் துறையின் தோட்டக்கலை பிரிவு மூலம் ஆடிப்பருவத்திற்கான காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பை முதல்வர் ரங்கசாமி பயனாளிகளுக்கு நேற்று வழங்கினார்.
புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் தோட்டக்கலை பிரிவு மூலம் தோட்டக்கலை பயிர் சாகுபடி பரப்பளவு மற்றும் உற்பத்தி திறன் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
அதன் ஒருபகுதியாக, மக்களுக்கு தேவையான பசுமையான மற்றும் தரமான காய்கறிகளை அவர்களின் வீட்டின் பின்புறம் மற்றும் மாடிகளில் சாகுபடி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையில் ஊட்டச்சத்து காய்கறி தோட்டம் அமைக்க ரூ. 250 மதிப்பிலான காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு ஆடிப்பருவத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.
அதன்படி, ஆடிப்பெருகை முன்னிட்டு முதல்வர் ரங்கசாமி, காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பை பயனாளிகளுக்கு நேற்று வழங்கினார்.
இதில், துறை இயக்குநர் ஜெயசங்கர், இணை இயக்குநர் சண்முகவேல், துணை இயக்குநர் சிவசுப்பிரமணியன், வேளாண் அலுவலர்கள் சிவகுமார் மற்றும் காமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
