/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.766.45 கோடி முதலீட்டில் 4,627 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: சட்டசபையில் கவர்னர் ராதாகிருஷ்ணன் தகவல்
/
ரூ.766.45 கோடி முதலீட்டில் 4,627 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: சட்டசபையில் கவர்னர் ராதாகிருஷ்ணன் தகவல்
ரூ.766.45 கோடி முதலீட்டில் 4,627 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: சட்டசபையில் கவர்னர் ராதாகிருஷ்ணன் தகவல்
ரூ.766.45 கோடி முதலீட்டில் 4,627 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: சட்டசபையில் கவர்னர் ராதாகிருஷ்ணன் தகவல்
ADDED : ஆக 01, 2024 06:16 AM

புதுச்சேரி: நிதி ஆதாரங்கள் அளவாக இருப்பதால் அரசு செலவினங்களை வருவாய்க்கு தகுந்தபடி சீரமைக்கும் நிலை உள்ளது என, கவர்னர் ராதாகிருஷ்ணன் சட்டசபையில் உரையாற்றினார்.
புதுச்சேரி சட்டசபையின் 5வது பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் நேற்று துவங்கியது. கவர்னர் ராதாகிருஷ்ணன் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:
புதுச்சேரி சட்டசபையில் 24-25ம் ஆண்டுக்கான எனது உரையை நிகழ்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். 15வது சட்டசபையின் 5வது கூட்டத் தொடரை தொடங்கி வைத்து பெருமை வாய்ந்த இந்த அவையில் என் முதல் உரையை ஆற்றுகிறேன்.
2016ம் ஆண்டுக்கு முந்தைய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான நிலுவைத்தொகை, அரசு கல்வி நிறுவனங்கள், சார்பு கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர், ஊழியர்களின் 7வது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலான நிலுவைத் தொகைக்காக மத்திய அரசு 2023-24ம் ஆண்டில் திருத்திய மதிப்பீட்டில் ரூ.271 கோடி வழங்கியுள்ளது. இதன்மூலம் 16 ஆயிரம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோரும், ஆயிரத்து 500 ஆசிரியர், ஊழியர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக புதுச்சேரி நிர்வாகம் மத்திய அரசுக்கு தனது நன்றியை தெரிவிக்கிறது.
ஏழைகள், சமுதாயத்தில் நலிவுற்றோர் நலனுக்கு முன்னுரிமை அளித்தும், சாலைகள், குடிநீர் வழங்கல், துப்புரவு, மின்விசை, சுகாதாரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், தொழில்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், குழந்தைகள் மற்றும் மகளிர் நலம், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் போன்ற முக்கியமான துறைகளின் வளர்ச்சியை உறுதிசெய்வதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
நலத்திட்டங்கள் நலிவுற்ற மக்களிடம் விரைவாக சென்றடையும் பொருட்டும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கவும், அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நேரடி போட்டி தேர்வுகள் மூலம் இந்த அரசு நிரப்பி வருகிறது. அதன்படி, கடந்த நிதி ஆண்டில் நேரடி போட்டி தேர்வு மூலம் பல்வேறு அரசு துறைகளில் உள்ள 1,119 பதவிகள் நிரப்பப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்லிமெண்ட் குழு புதுச்சேரி அரசு துறைகளின் செயல்பாடுகளை பாராட்டியும், நிர்வாக செயல்பாடுகளில் முழு திருப்தியும் வெளிப்படுத்தியுள்ளது. ஆட்சி பரப்பின் நிதி ஆதாரங்கள் அளவாகவே இருப்பதால், அரசு செலவினங்களை வருவாய்க்கு தகுந்தவாறு சீர் செய்துகொள்ள வேண்டிய நிலை உள்ளது.
இதனை எம்.எல்.ஏக்கள் நன்கு அறிவர். இருப்பினும் ஏழைகளின் நலனுக்காக தேவையான நிதியை வழங்குவதை அரசு உறுதிபடுத்தியுள்ளது. கடந்த நிதி ஆண்டில் மொத்த ஒதுக்கீடான ரூ.12 ஆயிரத்து 250 கோடியில் ரூ.11 ஆயிரத்து 464 கோடி அதாவது 93.58 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த செலவினம் முந்தைய ஆண்டு செலவினத்தோடு ஒப்பிடுகையில் 6.55 சதவீதம் அதிகமாகும். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும் நிதி குறியீடாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி திகழ்கிறது. கடந்த நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியாக ரூ.48 ஆயிரத்து 52 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 7.54 சதவீதம் கூடுதலாகும்.
புதுச்சேரியின் தனிநபர் வருமானம் 2022-23ம் ஆண்டில் ரூ.2 லட்சத்து 44 ஆயிரத்து 469 லிருந்து 2023-24ம் ஆண்டில் ரூ.2 லட்சத்து 63 ஆயிரத்து 68 ஆக உயர்ந்துள்ளது. இது 7.61 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது.
புதுச்சேரி அரசின் இலவச அரிசி திட்டத்தில் 219 கோடி செலவு செய்யப்பட்டு, 3.37 லட்சம் குடும்ப ரேஷன்கார்டுதாரர்கள் பயனடைந்துள்ளனர். இலவச காஸ் மானியத்திட்டம் கடந்தாண்டு ஜூலை மாதம் புதுச்சேரியில் துவக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 21.50 கோடி செலவு செய்யப்பட்டு, 1.75 லட்சம் குடும்ப ரேஷன்கார்டுதாரர்கள் பயனடைந்துள்ளனர்.
அரசிடமிருக்கும் உபரி மின்சாரத்தை விற்பனை செய்வதற்காக பவர் டிரேடிங் கார்பரேஷனுடன் புதுச்சேரி அரசு ஒப்பந்தமிட்டு 27.05.2023 முதல் மின் வர்த்தக துவங்கி நடந்து வருகின்றது. இதன் மூலம் கடந்தாண்டு 550 மில்லியன் யூனிட் உபரி மின்சாரம் விற்பனை செய்து, 261.20 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துவங்க தொழில்முனைவோர்களிடமிருந்து 80 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 16 விண்ணப்பங்களுக்கு அனுமதி அளித்து 766.45 கோடி முதலீட்டில் 4,627 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
புதுச்சேரி பகுதியில் 21 நிறுவனங்களுக்கு 7.13 கோடியும், காரைக்கால் பகுதியில் 4 நிறுவனங்களுக்கு 1.65 கோடியும் முதலீட்டு மானியம் வழங்க மாநில அளவிலான குழு ஒப்புதல் அளித்துள்ளது. 23 அரசு துறை சேவைகளுக்கு பிளாக் செயின் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
குருமாம்பேட் காரைக்காலில் குப்பை கொட்டும் கிடங்கில் மரபு வழி கழிவுகளை அகற்றும் பணிகள் முறையே 41.60 கோடி மற்றும் 4.28 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 21.89 லட்சம் வேலை நாட்கள் உருவாக்கப்பட்டு, 90,412 கிராமப்புற குடும்பங்கள் பயனடைந்துள்ளன. இதன் மூலம் கடந்த நிதியாண்டில் 466 பணிகள் 58.49 கோடி செலவில் செய்து முடிக்கப்பட்டுள்ளன. பிரதமரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் 31 சாலை பணிகள் 63.44 கி.மீ., நீளத்துக்கு 35.37 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளன. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடந்தாண்டு பயனாளிகளுக்கு 65.20 கோடி வழங்கப்பட்டு 963 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது. புதிதாக பிறக்கும் பெண் குழந்தைகளுக்கான அதிகாரமளிக்கும் முதல்வரின் அரவணைப்பு என்ற திட்டம் கடந்தாண்டு துவக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 2,100 பெண் குழந்தைகளுக்கு 10.50 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கவர்னர் உரையாற்றினார்.
தொடர்ந்து கடந்த ஆண்டில் பல்வேறு துறைகளின் கீழ் அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள், சாதனைகளை கவர்னர் ராதாகிருஷ்ணன் விளக்கமாக உரையாற்றினார்.