புதிய குற்றவியல் சட்டங்கள் அரசு திட்டங்கள் குறித்த கண்காட்சி
புதிய குற்றவியல் சட்டங்கள் அரசு திட்டங்கள் குறித்த கண்காட்சி
ADDED : ஜூன் 19, 2026 07:31 PM

புதுச்சேரி: புதுச்சேரி காவல்துறை சார்பில், புதிய குற்றவியல் சட்டங்கள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி கடற்கரை சாலை, காந்தி திடலில் நேற்று நடந்தது.
கண்காட்சியை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார். இதில், எம்.எல்.ஏ.,க்கள் விக்னேஷ், அழகானந்தம், ராமு, தலைமை செயலர் சரத் சவுகான், டி.ஜி.பி., ஷாலினி சிங், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, வந்த முதல்வர் ரங்கசாமி கண்காட்சியை பார்வையிட்டார். அவருடன், எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், நேரு ஆகியோர் உடனிருந்தனர்.
கண்காட்சியில் புதிய குற்றவியல் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக் ஷய அதினியம் ஆகிய சட்டங்களின் முக்கிய அம்சங்கள், ஜீரோ எப்.ஐ.ஆர்., மின்னணு ஆதாரங்களுக்கான நடைமுறைகள், சுருக்க விசாரணைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மேம்பட்ட சட்டப் பாதுகாப்புகள் உள்ளிட்ட நவீன சட்ட அம்சங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.
புதுச்சேரி போலீசாரின் குறிப்பிடத்தக்க சாதனைகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் சமூக பணிகளில் பெற்றுள்ள வெற்றிகள் குறித்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 12 ஆண்டு காலங்களில் செய்துள்ள சாதனைகள் மற்றும் மத்திய அரசின் உதவியோடு புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களும் கண்காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
