நிலக்கரி துகளால் தீப்பிடித்ததால் விருத்தாசலத்தில் பரபரப்பு
நிலக்கரி துகளால் தீப்பிடித்ததால் விருத்தாசலத்தில் பரபரப்பு
ADDED : மே 30, 2026 10:30 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்தில் பறிமுதல் செய்து கொட்டப்பட்டிருந்த நிலக்கரி துகள்கள், திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெய்வேலி அருகே ஊ.மங்கலம் பகுதிகளில் நிலக்கரி துகள்கள், வெள்ளை மண் ஆகியவை மர்ம நபர்களால் கடத்தப்படுவதை, போலீசார் மற்றும் வருவாய்த்துறையினரால் பறிமுதல் செய்கின்றனர். அப்படி பறிமுதல் செய்யப்பட்ட நிலக்கரி துகள்கள், விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்தின் பின்புறம் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது, வெயிலின் உஷ்ணம் அதிகமாக உள்ள நிலையில், தரையில் குவித்து வைக்கப்பட்டிருந்த நிலக்கரி துகள்கள் நேற்று திடீரென தீப்பிடித்து எரிய துவங்கின. அங்கிருந்த வருவாய்த்துறை ஊழியர்கள் தண்ணீரை ஊற்றியும், தீ அணையாமல் மேலும் பரவியது. அதையடுத்து, விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவத்தால், தாலுகா அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
