பிரதமரின் எண்ணத்தை புதுச்சேரி போலீசார் நிறைவேற்ற வேண்டும் கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
பிரதமரின் எண்ணத்தை புதுச்சேரி போலீசார் நிறைவேற்ற வேண்டும் கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
ADDED : ஆக 09, 2026 06:20 PM
புதுச்சேரி: நம்முடைய சிறப்பான செயல்பாடு தேசிய அளவில் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார்.
புதுச்சேரி கோரிமேடு மைதானத்தில் நேற்று நடந்த ஜனாதிபதி கலர்ஸ் விருது வழங்கும் விழாவில், கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது:
புதுச்சேரி காவல்துறை வரலாற்றில் இன்று ஒரு பொன்னான நாள். நாம் பெருமையோடு கொண்டாட வேண்டிய ஒரு உன்னதமான நாள். ஜனாதபதியின் வண்ணக்கொடி விருது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவினால் புதுச்சேரி காவல்துறைக்கு வழங்கப்படும் நாள்.
இந்த தேசிய விருது, புதுச்சேரி காவல்துறையினரின் உழைப்பிற்கும், தியாகத்திற்கும், அர்ப்பணிப்பிற்கும் கிடைத்த ஒரு மிகப் பெரிய அங்கீகாரம். குடிமக்களின் பாதுகாப்பு முதல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொண்டு வந்த புதிய கிரிமினல் சட்டங்களின் நடைமுறை, புதிய தொழில்நுட்பம் பயன்பாடு வரை புதுச்சேரி காவல்துறை தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
பிரதமரின் நஷா முக்த பாரத் அபியான் எனும் போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க புதுச்சேரி போலீசார் ஆபரேஷன் விடியலும், பெண்களின் சமூகப் பாதுகாப்பை, தன்னம்பிக்கை வளர்க்க வீர மங்கை சேவை ஆகியவை மக்களின் நம்பிக்கையை பெற்று இருக்கிறது.
புதுச்சேரிக்கு உலகம் முழுவதும் இருந்து லட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் நம்பிக்கையோடு வருகிறார்கள். அதற்கு காரணம், நமது காவல்துறை புதுச்சேரியின் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதுதான். அதற்காக, காவல்துறையை பாராட்டுகிறேன்.
புதுச்சேரி காவல் துறையை வலுப்படுத்த, 70 சப் இன்ஸ்பெக்டர்கள், 850 போலீஸ் கான்ஸ்டேபிள், 500 ஊர்க்காவல் படை வீரர்கள் உட்பட 1400 புதிய பணி நியமனங்கள் நடைபெற்று இருக்கிறது. துடிப்பான இளைஞர்கள் காவல்துறை பணியில் சேர்த்து இருக்கிறார்கள். ஐ.ஆர்.பி.என்., உட்பட சுமார் 2300 காவலர்களுக்கு ஸ்பெஷல் கிரேடு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 300 காவலர்களுக்கு நேரடி பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது.
காவல்துறை சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அதுமட்டுமல்ல, போதைப் பழக்கம் ஒழிக்கப்பட வேண்டும். பிரதமரின் போதையில்லாத இந்தியா உருவாகவும், இளைஞர்களை தேசத்தை கட்டமைக்கும் ஆக்கப்பூர்வமான பணியில் ஈடுபடுத்தும் மிகப் பெரிய பொறுப்பும் காவல்துறைக்கு இருக்கிறது. அதை நோக்கி நீங்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு கவர்னர் பேசினார்.
