ADDED : ஜூலை 27, 2026 07:00 PM
திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதியில் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத திட்டம் பணிகளை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்.
மண்ணாடிப்பட்டு தொகுதியில் சுத்துக்கேணி, கொடாத்துார், லிங்காரெட்டிப்பாளையம் கிராமங்களில் வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் ரூ. 64 லட்சத்து 23 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் வளர்ச்சியடைந்த இந்தியா– வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத 125 நாள் திட்ட பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், பா.ஜ., பிரமுகர் முத்தழகன், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, அமைச்சர்களிடம் அப்பகுதி பெண்கள் தங்களுக்கு திட்டத்தின் கீழ் தொடர்ந்து 125 நாட்கள் பணி வழங்க வேண்டும். கொடாத்துாரில் பயணிகள் நிழற்குடை, ஐயனாரப்பன் கோவில் வளாகத்தில் நாடக மேடை, கோவிலில் பொங்கல் வைப்பதற்கான கூடம் அமைத்து தர வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதற்கு, அமைச்சர் நமச்சிவாயம் தங்களது கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
