ADDED : ஜூன் 26, 2026 06:00 PM
புதுச்சேரி: காய்ச்சலுக்கு ஊசி போட்டு மாத்திரை சாப்பிட்ட ஆட்டோ டிரைவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
புதுச்சேரி,வம்பா கீரப்பாளையம், முத்துமாரி அம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் சண்முகவேலு, 50; ஆட்டோ டிரைவர். இவருக்கு எர்னஸ்தின் என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த, 24ம் தேதி சண்முகவேலுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து, அவரது மனைவி எர்னஸ்தின் மாலை 4:30 மணிக்கு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் காய்ச்சல் அதிகமாக இருப்பதாக கூறி, இரு ஊசிகளை போட்டார். மருத்துவமனையின் மருந்தகம் மூடப்பட்டிருந்ததால், மாத்திரை வாங்காமல், சண்முகவேலு மற்றும் அவரது மனைவி வீட்டிற்கு சென்றனர்.
மீண்டும் அன்று இரவு 7:00 மணிக்கு மீண்டும் மருத்துவமனை மருந்தகத்திற்குச் சென்று மாத்திரைகளை வாங்கி வந்தனர். இரவு 10:30 மணிக்கு சண்முகவேலு இட்லி சாப்பிட்டு, டாக்டர் கொடுத்த மாத்திரையை உட்கொண்டார்.
மாத்திரை சாப்பிட்ட அடுத்த, 10 நிமிடத்தில் திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த எர்னஸ்தின் உறவினர்கள் உதவியுடன் ஆட்டோவில் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு, பரிசோதித்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து எர்னஸ்தின் அளித்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து சண்முகவேலு இறந்தது குறித்து விசாரித்து வருகின்றனர்.
