பிராந்திய ஓமியோபதி ஆராய்ச்சி நிறுவனம் முன்மொழிவு
பிராந்திய ஓமியோபதி ஆராய்ச்சி நிறுவனம் முன்மொழிவு
ADDED : ஆக 07, 2026 05:11 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் பிராந்திய ஓமியோபதி ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கும் முன்மொழிவை அதிகாரிகள், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து தெரிவித்தனர்.
மத்திய ஆயுஷ் அமைச்சகம் கீழ் செயல்படும் மத்திய ஓமியோபதி ஆராய்ச்சி கவுன்சிலின் உதவி இயக்குநர் (நிர்வாகம்) சுகீர்த்தி சிங், கணக்கு அலுவலர் உத்தமன் நாயர் ஆகியோர், புதுச்சேரி ஓமியோபதி மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கு அலுவல் பயணம் செய்தனர். இந்த பயணத்தின் போது, அவர்கள், முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
இவர்கள், புதுச்சேரியில் செயல்பட்டு மக்களுக்கு ஓமியோபதி மருத்துவ சேவைகளையும், ஆராய்ச்சி பணிகளை சிறப்பாக வழங்கும் ஓமியோபதி மருத்துவ ஆராய்ச்சி மையத்தை, பிராந்திய ஓமியோபதி ஆராய்ச்சி நிறுவனமாக உயர்த்துவதற்கான முன்மொழிவு குறித்து முதல்வரிடம் கூறினர். இந்த மேம்படுத்தலின் அவசியம், இதன் மூலம் புதுச்சேரி மற்றும் சுற்றியுள்ள மக்களுக்கு கிடைக்கவுள்ள பலன்கள் பற்றி விளக்கினர்.
இந்த நிறுவனம் மேம்பட்ட ஓமியோபதி ஆராய்ச்சி, தரமான நோயாளர் சிகிச்சை, கல்விசார் நடவடிக்கைகள், பொது சுகாதார திட்டங்களுக்கான சிறப்புமிக்க மையமாக உருவாகும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
ஆதாரப்பூர்வமாக ஓமியோபதி ஆராய்ச்சியை வலுப்படுத்துதல், மக்களுக்கு தரமான மற்றும் மலிவான சுகாதார சேவைகளை விரிவுபடுத்துதல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், பிராந்திய அளவிலான ஆராய்ச்சி ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இந்த நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும், இதன் மூலம் ஆயுஷ் அமைச்சகம் கீழ் புதுச்சேரி ஓமியோபதி ஆராய்ச்சிக்கான முக்கிய மையமாக உருவெடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த முன்முயற்சியை பாராட்டிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் பிராந்திய ஓமியோபதி ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கும் திட்டத்திற்கு தனது முழு ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளார். இந்த திட்டம், புதுச்சேரி மக்களுக்கு பயனளிப்பதோடு, ஓமியோபதி மருத்துவ சேவை மற்றும் ஆராய்ச்சியின் வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்ற நம்பிக்கையை தெரிவித்தார்.
