ADDED : ஆக 04, 2026 08:33 PM
வில்லியனுார்: நில ஆவணத்தை வாங்கி தர லஞ்சம் கேட்ட உதவி சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி, அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ஆகாஷ்,23. இவரது மனைவி சிவசங்கரி. இவர், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து வந்தவர். இவருக்கு பூர்வீக சொத்து இருப்பதும், அதற்கான ஆவணங்களை அவரது சித்தப்பாவான வில்லியனுாரை சேர்ந்த குமாரவேலிடம் இருப்பதும் தெரிய வந்தது. அதன்பேரில், ஆகாஷ், தனது மனைவி சிவசங்கரிக்கு சொந்தமான நிலத்தின் ஆவணங்களை குமாரவேலுவிடம் இருந்து வாங்கி தரவேண்டி, வில்லியனுார் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், உதவி சப் இன்ஸ்பெக்டர் ஸ்டாலின், போலீஸ்காரர் கண்ணரசு ஆகியோர் குமாரவேலுவை அழைத்து விசாரித்து, நிலத்தின் ஆவணத்தின் நகலை வாங்கி ஆகாஷிடம், ரூ.1,500 வாங்கிக் கொண்டு கொடுத்தனர். அதனை பெற்ற ஆகாஷ், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கம் எடுத்து பார்த்தபோது, சிவசங்கரியின் தந்தை பெயரில் ஒரு நிலம் இருப்பது தெரிய வந்தது. அந்த ஆவணத்தை ஆகாஷ், குமாரவேலுவிடம் கேட்டார். அதில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து குமாரவேலு, ஆகாஷ் தன்னை மிரட்டுவதாக வில்லியனுார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், உதவி சப் இன்ஸ்பெக்டர் ஸ்டாலின், போலீஸ்காரர் கண்ணரசு ஆகியோர் புகார் கொடுத்த குமாரவேலு மற்றும் ஆகாஷ் ஆகிய இரு தரப்பினரையும் மீண்டும் அழைத்து விசாரித்தனர்.
பின், குமாரவேலுவிடம் இருந்து கூடுதல் நில ஆவணத்தை வாங்கிய போலீசார், இதுகுறித்து ஆகாஷிற்கு போனில் தகவல் தெரிவித்து, நேரில் வந்து ரூ.1,000 பணத்தை கொடுத்துவிட்டு நில ஆவணத்தை வாங்கிச் செல்லுமாறு கூறினார்.
இதுகுறித்து ஆகாஷ் கடந்த 17ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் தெரிவித்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து, லஞ்சம் கேட்ட உதவி சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்கார் மீது வழக்கு பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து லஞ்சம் வழக்கில் சிக்கிய சப் இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் மற்றும் போலீஸ்காரர் கண்ணரசு ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து டி.ஜி.பி., ஷாலினி சிங் உத்திரவிட்டார்.
